Sunday, September 25, 2022

மாலை நடைபயணத்தில்

எப்போதும் நமது மாலைவேளை நடைபயணத்தின் போது 1/2 மைல் தள்ளிப் போகும் போது அங்கு வசிக்கும் ஒரு உள்ளூர்க்காரர் தனது நாயோடு வாக்கிங் போகும் போது நின்னு என்னுடன் பேசி விட்டுப் போவார். இவரைப் பற்றி முன்பே எழுதியிருக்கேன்.

அவர் ஒரு இஞ்சினியர். பல நாடுகளில் அவரது கம்பெனியில் ஆட்களை அமர்த்தி இவரை மேற்பார்வைக்கு அனுப்புவார்கள். இப்போது பல நாடுகளுக்குப் பயணம் செய்கிறார். இந்தியாவிலும் இவருக்கு ஆட்களுண்டு. 

இதற்கு முன் பேசும் போது இவர் இந்திய மக்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள் பிரிவுகள், நார்த் சவுத் பிரச்சனைகள் பற்றியெல்லாம் கவலையாகச் சொன்னார்.

இரண்டு நாள் முன் பார்த்தப்ப, அவர் என்னிடம் என்ன உன்னை நடுவுல ஒரு மாசம் பார்க்கலை, நான் உங்க ஊருக்குப் பத்து நாள் போனேன்னார். அஸ்ஸாம்ல போன மாசம் ஒரு வாரம் இருந்ததைச் சொன்னார். அன்று சந்தோஷமாக அவர் அநுபவங்கள், என் அநுபவங்களைப் பேசினோம்.

இன்று மாலை பார்க்கும் போது, அவரிடம் நான், அன்னிக்கு நான் ஒன்னு சொல்லலை, அது நான் முப்பது வருடம் முன் இருக்கும் போது அங்கு தீவிரவாதிகள் அதிகம், வெளிநாட்டினரைக் கடத்தி பணயக் கைதிகளாக வச்சுருவாங்க, நீங்க அந்தப் பக்கம் போனா பாதுகாப்போடு போங்க, தனியா போகாதீங்கன்னேன்.

மனுசன் சிலிர்த்து எழுந்துட்டார்.

நான் பல நாட்டுக்குப் போயிருக்கேன், ஆனால் இந்தியர்கள் மாதிரி மோசமான ஆட்களைப் பார்த்ததில்லை, நீங்கள் ஒருவருக்கொருவர் அவன் சரியில்லை இவன் சரியில்லை, நேரில் பார்த்து பேசியது கூட கிடையாது, அநுமானத்தில் அடிச்சுவுடறீங்க, அதுவும் உங்களுக்குள்ளவே இன்னொருத்தரை நம்பாம மோசமாக சொல்றீங்கன்னு போட்டு சாத்து சாத்துன்னு சாத்திபுட்டார் மனுசன். உங்களுக்குள்ள நிறைய ஜாதி, மத, இனம், மொழி, ரீஜன் என பலவிதத்துல ஒருத்தரை ஒருத்தர் discriminate பண்றீங்க. இவ்வளவு மோசமாக நான் எங்கயும் பார்க்கலைன்னு சொல்லி, அவரோட கம்பெனியில் நடந்த நார்த்சவுத் சண்டையைச் சொல்றார்.

என்னப்பா இது, அங்க பாதுகாப்பா இருங்க, மூனு வருஷம் வாழ்ந்திருக்கேன்னு சொன்னா, மநுசன் போட்டு உருட்டி தள்ளி மொத்தி புட்டு போயிட்டார்.

ஒழுங்கா பேசாம நடந்து போயிட்டு வந்திருக்கலாம். இல்லாத சந்திராஷ்டமத்தை வரவழைச்சுகிட்டேன்.

நம்ம ஜாதகம் சுயமாகவே இயல்பாக இயங்குதுப்பா!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Camina en silencio!

No comments: