Monday, April 6, 2020

போன் செய்ய முடியாத இரவுகள்

கடந்த பத்து-15 வருடமாக இந்திய நேரம் காலை 6.30-7க்குள் அம்மாவிற்கு தினமும் போன் பண்ணுவேன். ஹரிகேசநல்லூரோ சிவகுமாரோ சொல்லும் ஜோசியத்துல அம்மா டேய் இன்னிக்கு உனக்கு சந்திராஷ்டம்டா, டேய் இன்னிக்கு எனக்கு சந்திராஷ்டம்டா, நாம பேசாம இருக்கிறதே நல்லதுடான்னு சொல்லிண்டே, அம்மா நமக்கு தினமுமே சந்திராஷ்டம்மா, விடு நம்மபடி போவோம்ன்னு பேச்சு தினமும் ஓடும்.

இனி அந்த காலை 6.30 மணி கால் 10-15 வருடமாக பண்ணிகிட்டிருந்தது, இனி யாருக்கு பண்ணுவதுன்னு முழிக்கிற நேரமாயிடுச்சு. இங்க இரவு 9மணி ஆனாலே அம்மாக்கு பண்ணனும்ங்கிற துடிப்பு அம்மா உயிர் அடங்கினாலும் எனக்கு இன்னும் அடங்க மாட்டேங்குது.

அம்மா காலமாகி இந்த வாரம் அறுபது நாள் ஆகப்போவுது. ஆறு வருடம் முன் அப்பா போன போது கூட இருக்க முடியாத வேதனை இன்னும் வலிக்குது. அந்த குற்றம் அம்மா விசயத்துல செய்திடக்கூடாதுன்னு ரொம்ப இருந்தேன். செய்ய முடிந்தது.

டிசம்பர்ல அம்மாவோட 5 வாரம் பெங்களூர்ல இருந்தேன். இந்தியாவவிட்டு வந்து பல வருடமாகிவிட்டது. ஒவ்வொரு தடவை போகும் போதும் பல்வேறு தடங்கல்கள், சிரமங்கள். உறவினர் உதவி இல்லாம எதுவுமே செய்ய முடியாத நிலை. இந்த தடவை அப்படி இருக்கக்கூடாதுன்னு, இந்தியாவுல வாழ கத்துகிட்டேன். இருந்த 5 வாரமும் தினமும் படிப்பினைகள். தினமும் ஏதாவது ஒரு தொல்லை அல்லது கஷ்டம் வரும். தனியா சமாளிக்க முயற்சி செய்தேன். இனி அங்க போனா ஐக்கியமாயிர முடியும்கிற அளவுக்கு நிறைய கத்துகிட்டேன்.

இனி அது தேவையில்லைன்னு ஆயிடுச்சு. அவ்வளவு தெளிவா ரொம்ப என்னோட பேசிகிட்டிருந்த அம்மா இவ்வளவு சீக்கிரம் சுருண்டு தன் வாழ்வை முடித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை!

டிசம்பரிலேயே அம்மா உடல்நலம் சரியில்லைன்ன போதே மூன்று ஆஸ்பத்திரிகள் கூட்டிப் போய் பார்த்தேன். எல்லா மருத்துவர்களும் அதையே தான் சொன்னார்கள். இன்னும் இரண்டு மாதம் தான்னு. ஆனால் அம்மாவோட தெளிவான பதில்கள் பேச்சுகள் எப்படியும் ஐந்தாறு மாதம் ஓடும், இனி அடிக்கடி வந்து போய்தான் ஆவனும்கிற நிலமை.

டாக்டர்கள் மிகதெளிவாகவே சொல்லிவிட்டார்கள். இந்த பேஷண்டை வீட்டுல வச்சுக்கமுடியாதுன்னுட்டாங்க. கூட்டிப்போன சில ஆஸ்பிட்டலகளில் ஒரு நாளுக்கு 30கே-40கே, வேறு இடம் மாற்றினால், 17கே மற்றும் மருந்து ஊசி ஐவி செட் முதல் எல்லாமே நாம தான் வாங்கிக்கொடுக்கனும். இன்சூரன்ஸ் வயதானவர்களுக்கு கிடைப்பது சிரமம். கிடைப்பதும் குறைவான அமௌண்ட்டுக்கு.

நான் பிப்ரவரியில் மறுபடியும் போன மறுநாளே மறைந்து விட்டாரகள். நான் வந்திருக்கிறேன் என்று சொன்னவுடன் தலை திரும்பி பார்க்க்முயன்றார்கள். முடியவில்லை. அதுவே கடைசி.

டிசம்பரில் நான் போனப்பவே 3 ஹாஸ்பிட்டலிலும் ஐசியு ஃபுல். உள்ள அட்மிட் ஆவதும் சிரமம். ஆயிட்டா டிஸ்சார்ஜ் ஆவதும் சிரமம். இடைப்பட்ட நாட்களில் பில் சில லட்சங்களைத் தொட்டுவிடும். முன்கூட்டி தினமும் பணம் கட்டினால் தான் மருத்துவமே!

அம்மா கொரோனா வேதனைகளையும் சேர்த்து யாரும் அநுபவிக்க வேணாம்ன்னு தெரிஞ்சோ என்னவோ சீக்கிரம் முடிச்சுகிட்டாங்க. அம்மாவை மார்ட்சுவரிக்கு தூக்கிட்டு போய் பின்னர் உடன்பிறப்புகள் வந்தவுடன் கூடவே ஆம்புலன்ஸில் எடுத்து வந்தது மட்டுமல்ல, எரிப்பது கரைப்பது என்கிற எல்லா unhygienic செயல்களிலும் என் உடம்பு ஈடு கொடுக்கலை. இப்ப ஒரு மாதமாக கிடைத்த ஸ்டே அட் ஹோம் தான் இப்ப கிடைத்த ரெஸ்டே!

அம்மாவுடன் பேசிய பழைய நாட்கள் இனி கிடைக்கப் போவதில்லை. ஆனால் போகும் முன் தன்னோடு அருகிலிருந்த சில நல்ல மனிதர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அந்த நல்ல மனிதர்களை சந்திக்கும் போது நினைக்கும் போது அம்மாவின் நினைவுகள் மனதிலிருக்கும்.

போன் கால் செய்ய முடியாத ஓர் இரவில்!