Saturday, July 10, 2021

யதார்த்தத்தின் அழைப்பிதழ்

 நமக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்.

குளிச்சுட்டு சாப்பிடலாம்ன்னு தயாரானேன்.

வாசலில்வீ ட்டுக்கு வந்த தபால் எடுத்து வந்தேன். அதில் ஒரு அழைப்பிதழ்இ ருந்தது. ஆவலுடன் பிரிச்சுப் பார்த்தேன்.

அது ஒரு Funeral Homeலேர்ந்து வந்திருக்கு. மற்றவர்களோட இழப்புகளுக்குப் போன அதே funeral home லிருந்து. பக் ன்னுச்சு.

கையில செக்புக்கோட வர வேண்டாம். நாங்க மாதாந்திர தவணை எடுத்துப்போம்ன்னு சொல்லி விருந்துக்கு அழைப்பிதழ்.

உன் இறப்பிற்கு தயாராகிக்க. அதற்கு நாங்க உதவறோம்ன்னு ஒரு அழைப்பிதழ். தேவையானது தான். ஆனால் எதிர்பார்க்காத நேரத்தில், அதுவும் நேற்று கோவிலில் கிடைத்த பிரசாத்ததில் இன்னும் திளைப்பதிலிருந்து விடுபடாத நேரத்தில் இது ஒரு அதிர்ச்சி அலையாக.

எங்க போக எங்கிருந்து வரும்அ ழைப்பிதழ். அதுவும் என் பேர் போட்டு பிரிண்ட் அடிச்சு தனிப்பட்ட அழைப்பிதழாக வேற வருது! முருகா! தனிப்பட்ட பெயரில் என் பேர் போட்டு பிரிண்ட் அடித்து வரும் போது கொஞ்சம் ஆடிப்போச்சு.

வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்த ஓர் அழைப்பிதழ்!
வாழ்வினிது
ओलै सिरिय !

பச்சைக்கற்பூரம்

 இன்று மதியம் போஸ்ட்ல மறக்காம குறிப்பிடனும்ன்னு நினைச்சேன். ஆனால் நினைச்ச மாதிரியே மறந்துட்டேன்.

அது:

இன்னிக்கு பெருமாள் கோவில் குருக்கள் பழம் பிரசாதம் கொடுக்கும் போது ஒரு பெரிய பச்சைக்கற்பூரக்கட்டி ஒன்னும் கொடுத்தார்.

இது இன்னிக்கு காலையில பெருமாள் நெத்தியிலிருந்து அபிஷேகத்திற்கு முன்ன அவர் நெத்தியிலேர்ந்து எடுத்தது. இதை எப்போதும் முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே கொடுப்போம், சீக்கிரம் வாங்கிண்டு போயிடுவாங்க, இதை இன்னிக்கு உனக்கு கொடுக்கிறேன்னு கொடுத்தார்.

கொஞ்சம் புல்லரிச்சு போச்சு. ஆனால் இதை வச்சு என்ன செய்யறதுன்னு தெரியலை. அவரிடமே கேட்டுவிட்டேன்.

நிறைய சொன்னார்.

நீ அங்க சிவன் கோவில் விபூதி நெற்றியில வச்சுக்கிற மாதிரி, நெற்றியில வச்சுக்கலாம். அய்யங்கார் இதை ரொம்ப விசேஷமாகப் பயன்படுத்துவாங்க. வீட்டுக்குப் போய் பெருமாள் கிட்ட வச்சுட்டு தினமும் படுக்கிறதுக்கு முன்ன நெற்றியில வச்சுக்கன்னார். (அம்மா இருந்தப்ப இரவு நேரத்தில் குளிக்காம சாமி பக்கம் போக விடமாட்டாங்க. அது வேற. இவரிடம் நான் சொல்லலை).

மேலும் சொன்னார். 

ஒரு சின்ன துளியூண்டு துண்டு எடுத்து வாயில போட்டுக்கலாம், சர்க்கரைப் பொங்கல்ல போடலாம். இங்க கோவில்ல நாங்க கொடுக்கிற தீர்த்தத்தில் போடுவோம்ன்னார்.

கடைசியாக வெளிய போகுறதுக்கு முன்பு சொன்னார். வெளிய வெயில் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கு. காருக்குள் காத்து படற மாதிரி வெயில் படற மாதிரி வச்சுராதேன்னார். ஆபத்து புரிஞ்சுது.

கோவில் உள்ள நான் மாஸ்க் போட்டிருந்ததால் உள்ளேயே ஒரு சின்ன துண்டு எடுத்து வாயில் போடலை. வெளிய வந்து கையில் ஒட்டியிருந்த துகள்களை மட்டும் டேஸ்ட் பார்த்தேன். முன்பு சின்ன வயசுல அறிந்த பச்சைகற்பூரத்தின் டேஸ்ட் வாசனை புரிஞ்சுருச்சு. அதான் ரசாயனக்கலவையின் ஆபத்தும் புரிஞ்சுது. ஜாக்கிரதையாகக் கையாளனும்.

இந்த கோவிலுக்கு கடந்த 18-19 வருடமாகப் போய் வருகிறேன். பெருமாள் சந்நிதி எழுந்து ஒரு பத்து-12 வருடமிருக்கலாம். அம்மிணி ஏகாந்த சேவைக்கு பல வருடமாக வீணை வாசிப்பதால், அம்மிணிக்கு எடுபுடியாகத் தான் ஒவ்வொரு தடவையும் போவேன். 

அப்போது நாத்திக எண்ணங்களோடு இருந்த காலத்தில் சந்திதி உள்ளே போக மாட்டேன். குருக்கள்கள், இவ்வளவு தூரம் வந்துட்டு சந்நிதி உள்ள வராம போறானேன்னு பார்ப்பாங்க, ஆனால் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

கடந்த ஐந்தாறு வருடங்களாகத் தான் சந்நிதி (கர்ப்பகிரகம்) உள்ளே போய் அவர்கள் கையில் தீர்த்தம் வாங்கிப்பேன். ஆனால் இப்போதெல்லாம் கிடைக்கின்ற அந்த, நம்மைப் பார்த்தவுடன் அவர்கள் செய்யும் அந்த ஸ்பெஷல் தீபாராதானை, தீர்த்தம், பழம், பூ வெற்றிலை பிரசாதங்கள் தரும் நிறைவு, வெளியவே உட்கார்ந்து வெறுமனே திரும்பி வந்த காலத்திலிருந்ததில்லை. இப்போது ஒவ்வொரு தடவையும் கை நிறைய வெளியே வருகிறேன். அதற்கு தகுந்த பணத்தை நான் அவ்வளவாக போட்டதில்லை. தேவையறிந்து நம் கையில் நிறைய வருகிறதுபோலுள்ளது. 

சில சமயம் பிரசாதமாக ஒரு சின்ன பூவும், அவர்கள் நமக்காக செய்யும் அந்த ஸ்பெஷல் தீபாரதனை மட்டுமே தானிருக்கும். அப்போதும் கூட நல்ல நிறைவோடு வந்துள்ளேன்.

சின்ன வயதில், அம்மாவும் அப்பாவும் கோவில் விட்டு வெளியே வரும் போது அவர்கள் முகத்தில் தெரியும் அந்த மலர்ச்சி, இப்போது அதை உணரமுடிகிறது.

அவர்கள் எப்போதும் போல் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். மாறிவரும் நம் பார்வைகளில் நம்முடைய வெறுமையும் நிறைவும் தெரிகிறது. அவரவர் சுயமாகப் பெறும் அநுபவங்கள் இவை. தேவையிருப்பின் போது நிறைவுகள் தெரிகிறது. நிம்மதி தெரிகிறது.

சுய அநுபவங்களில்
வாழ்வினிது
ओलै सिरिय !

Friday, July 9, 2021

அமாவாசையில் இன்று

 இன்னிக்கு கார் வீட்டுல இருந்ததால கோவில் போலாமான்னு தோனிச்சு. எடு வண்டிய.

சிவன் கோவில் தரிசனம் முடிச்சு பிரசாதம் எடுத்து வந்து  கார்ல வச்சிட்டு, பெருமாளைத் தரிசிக்கப் போனேன்.

நம்ம குருக்கள் கூப்பிட்டு பெருமாளுக்குத் தீபாராதனை காட்டி பெரிய ரோஜாப்பூ ஆப்பிள் எல்லாம் பிரசாதமாக கொடுத்து நிறைய மந்திரத்தோட வாழ்த்தினார்.

சந்நிதி வெளியே ஹாலில் அவர் கையில் இன்று அமாவாசை தக்ஷ்ணையைக் கொடுத்தேன். அது அவருக்குத் தான். ஆனால் மனுசன் நேரா கோவில் உண்டியலில் போட்டுவிட்டார்.

இதை எதுவும் பார்க்காமல் வெளியே மாத்யானிகம் பண்ணிகிட்டு இருந்த இன்னொரு குருக்கள் உள்ளே வந்தவர், என்னை பத்மாவதி தாயார் சந்நிதிக்குப் கூப்பிட்டு பழமும் பூவும் ஆசீர்வதிச்சுக் கொடுத்தார். அவரிடமும் அமாவாசை தக்க்ஷணையைக் கொடுத்துவிட்டு மிகமிக மனநிறைவோட வெளிய வந்து உண்டகட்டியோட வீட்டுக்கு வந்து லேட்டாக சாப்பிட்டேன்.

அம்மா நினைவு வந்தது. ஒவ்வொரு அமாவாசையப்பவும் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த கோவிலுக்குப் போய் அங்க இருக்கிற ஐந்து குருக்கள்கள் கையில் 20 ரூபாய் கொடுத்துவிட்டு வருவாங்க. அப்பா தன்னோட 86வது வயதில் காலமாவதற்கு முதல் நாள் மிகுந்த தள்ளாமையிலும் சேர்ல உட்கார்ந்து அமாவாசை தர்ப்பணம் பண்ணிவிட்டு மறுநாள் மறைந்தார். அம்மா இதை சொல்லிகிட்டே இருப்பாங்க. கடைசியில் அம்மாவால் எழுந்து நடக்க முடியாமல் போனப்ப, பெங்களூரில் அந்த கோவிலுக்குப் போய் அந்த ஐந்து குருக்களிடமும் கொடுத்துவிட்டு வரச்சொன்னார்கள். போய் வந்தேன்.

இன்றும் அத்தகையை மனநிறைவுடன்
வாழ்வினிது
உங்கள் ஆசியுடன்
ओलै सिरिय !

Thursday, July 1, 2021

வெற்றிலை மாலை

பெருமாள் கோவில் ஏகாந்த சேவையில் அம்மிணியோட வீணை. வீணைக்கு ஆடியோ செட் பண்ணிட்டு வெளிய வந்து ஒவ்வொரு சந்நிதியாக வலம் வந்து கொண்டிருந்தேன்.

ஆஞ்சநேயர் சந்நிதிக்கு வந்தப்ப என்னைப் பார்த்த குருக்கள் தனியாக தீபாரதனை காட்டினது மட்டுமல்ல, ஆஞ்சநேயர் கழுத்திலிருந்து ஒரு பெரிய வெத்தலை மாலையை எடுத்து, அதோட இரண்டு ஆப்பிள் பழத்தையும் வச்சு எனக்கு கொடுத்தார். அசந்து போய் நின்னுட்டேன். அவர் எப்போதும் என்னைப் பார்த்தா விசாரிச்சுட்டு நிறைய பழம் கொடுப்பார். தட்டுல போடற பணத்தை அப்படியே உண்டியலில் சேர்த்துருவார்.

கொடுக்கும் போது சொன்னார், இந்த வெற்றிலை மாலை நேற்று முழுதும் பெருமாளுக்கு சாத்தியிருந்தது, இன்னிக்கு ஆஞ்சநேயருக்கு சாத்தியது. இதை உங்களுக்குக் கொடுக்கிறேன். இந்த வெத்தலையை சாப்பிடுங்க. மத்தவங்களுக்கும் கொடுங்கன்னார். புல்லரிச்சுப் போச்சு எனக்கு.

பொதுவாக பெருமாள் மேல சாத்தினதை யாராவது வாங்கிகிட்டுப் போய்டுவாங்க. முக்கியஸ்தர்களுக்கு முதலில் கிடைக்கும். இன்னிக்கு கோவில் மூடற நேரத்துல போனதால கிடைச்சது.

எப்போதும் கோவிலில் பிரசாதமாக கிடைக்கும் பழங்களில் ஒன்னு மட்டும் வச்சுகிட்டு அங்கு வர்ற யாருக்காவது பிரசாதம் கிடைக்காதவங்க, குறிப்பாக சின்னக் குழந்தைகளைப் பார்த்தா கொடுத்துருவேன்.

இவ்வளவு பெரிய வெற்றிலை மாலையை என்ன பண்றதுன்னு யோசிச்சு கிட்டு, கொடிக்கம்பம் பக்கத்துல வரும் போது ஒரு இளம் தம்பதியினர் கைக்குழந்தை மற்றும் ஒரு சின்னக்குழந்தையோட வந்துகிட்டிருந்தனர். அவங்களை நிப்பாட்டி பழம் மற்றும் வெற்றிலை இரண்டைக் கொடுத்து மனதை நிறைவுபடுத்திக்கிட்டேன்.

பெருமாள் என்னை சுயநலக்காரன்னு நினைச்சுடுவாரோங்கிற அச்சம் அப்பப்ப வரும். இது மாதிரி நிவர்த்தி செய்து கொள்வதில்

வாழ்வினிது
ओलै सिरिय !