Sunday, May 31, 2020

அசெம்ப்ளி ப்ரோகிராமில் என் நிழல்

எவருக்கும் தன்னோட உழைப்பை அது மற்றவரிடமிருந்து திருடி எழுதப்பட்டதுன்னு சொன்னா செம கோவம் வரும். நியாயம் தான்!

1991-92. கம்ப்யூட்டர் மேற்படிப்பு படித்த நேரம். கிளாஸ்ல கொடுக்கப்பட்ட அசைன்மண்ட் அசெம்ப்ளி லாங்க்வேஜ்ல கோடு எழுதனும். அதுவும் நாம தொட்டு டைப் அடிக்கிற கீ ஸ்ட்ரோக்ஸ் ரிகக்னைஸ் பண்ணி அதை மானிட்டர்ல டிஸ்ப்லே பண்ணனும். இதை அசெம்ப்ளி லாங்க்வேஜ்ல பண்ணனும். கீ போர்ட்ல இருக்கிற அத்தனை கீ களையும் ரிகக்னைஸ் பண்ணனும்ன்னு அஸைண்ட்மன்ட்.

லாங்க்வேஜ் யாருக்கும் கத்துத் தரப்படலை. ஒரு மாதம் கால அவகாசம்.

கிளாஸ்மேட்ஸ் 25 பேருக்கும் இது பெரிய சேலன்ஞ். கூடப்படித்தவர்களெல்லாம் மிகப்பெரிய அறிவாளிகள். அவர்கள் வாங்கிய மார்க் எல்லாம் என்னோட கம்பேர் பண்ணினால் கிளாஸில் என்னோட ரேங்க் 22-23 வரும்.

காலேஜ் லைப்ரரி போய் முதல்முறையா அசெம்பளி லாங்க்வேஜ் எப்படி இருக்கும்ன்னு படிக்க ஆரம்பிச்சேன். அடுத்து கம்பைளர் எப்படி வேலை செய்யும்ன்னு படிக்க ஆரம்பிச்சேன். சனி ஞாயிறு எல்லாம் கம்ப்யூட்டர் லேப்ல உட்கார்ந்து இதைச் செய்தேன்.

மொத்த வகுப்புல இரண்டே பேர் மட்டும் அத்தனை கீ ஸ்ட்ரோக்கும் ரிகக்னைஸ் பண்ணி டிஸ்ப்ளே பண்ணி காமிச்சோம்

கடைசி நாள் புரபசர் என் கூட உட்கார்ந்து என்னோட புரோகிராமைத் எடுத்து ஒவ்வொரு வரிக்கோடையும் விளக்கமாகப் பார்த்தார். சபாஷ் சொல்லிட்டு A+ grade கொடுத்தார்.

கூடப்படிச்சவங்க யாரும் இதை நம்பவேயில்லை. கூடப்படிச்ச நேவல் ஆபீசர் மற்றும் இன்னொரு நண்பி எல்லாம் இது எப்படி சாத்தியம். இவன் போன வருட ஸ்டண்டோட கோடு திருடி கொடுத்திருக்கான்னாங்க. கிளாஸ்ல இவன் மகா மட்டமாக படிக்கிறவன். நம்மில் யாராலையும் செய்ய முடியலை. இவன் திருடியிருக்கான்னு சொன்னாங்க. நான் உட்கார்ந்து வேலை செய்த கம்ப்யூட்டர் லேப்ல போய் மத்தவங்க கோட் எல்லாம் தேடிப்பார்த்திருக்காங்க! எதுவுமே இல்லை.

என் கோடை நான் ப்ளாப்பி டிஸ்க்ல வச்சிருப்பேன். அதுலேர்ந்தே தான் நான் ரன் செய்வதும்.

எனக்கோ மிகப்பெரிய அவமானம். சொல்வதோ கூடப்படிக்கும் நேவல் ஆபீசர். மற்ற இரு மிலிட்டரி மேஜர்கள்கிட்டயும் என் கோடைக் காண்பிச்சேன். சரி விடுன்னாங்க! அதில் ஒரு மேஜர் கோல்ட் மெடலிஸ்ட். புரபசரே அவர் முன்ன கிளாஸ் எடுக்கும் போது உளறிடுவோமான்னு நடுங்குற ஆள்.

கஷ்டப்பட்டு உழைச்சு சுயமாக எழுதியதை திருடிட்டேன்னு சொல்லிட்டாங்களேன்னு செம வருத்தம்.

திரும்ப புரபசர்ட்ட போனேன். சார் நான் ஒரு சீனியர் கோடைத் திருடிட்டேன்கிறாங்க! நீங்க ஒருத்தர் தான் இந்த கோடு என்னுதுன்னு சொல்ல முடியும். சந்தேகமிருந்தா எனக்கு ஏ ப்ளஸ் தராதீங்கன்னு போய்ச் சொன்னேன்.

புரபசர் அந்த நேவல் ஆபீசரையும் இன்னும் இருவரையும் தன்னோட ஆபீஸ்க்கு கூப்பிட்டு நீண்ட விளக்கம் கொடுத்தார் நான் திருடலைன்னு.

அதற்கப்புறம் தான் அந்த ஆபீசரும் மற்றவர்களும் வந்து என்னோட கோடைப் பார்த்து சரி சரி தப்பிச்சுட்டேன்னாங்க. படிக்கிற காலத்திலும் அவர்கள் தான் நெருங்கிய நண்பர்கள். இப்போதும்.

காலேஜ் முடியற சமயத்துல அவர்களில் ஒருவர் என்னைப்பற்றி எழுதிய கவிதை இது:

ப்ரோகிராமிங் கா வேர்ல்ட் மே தோ தும் ஜீத் சுக்கே ஹோ!
லேகின் இஸ்கோ லேப் மே தியா சபீ நே தங்!

No comments: