Friday, April 30, 2021

இடமறிந்து செய்வதல்ல தானம்

பேரிடர் காலங்களில் உலக அளவில் நிதி கொடுப்பவர்கள் எப்போதும் தங்களுக்கு விருப்பமான கட்டமைப்பு, உறவுகள், நண்பர்கள் உள்ள இடங்களைப் பார்த்து தான் நிதி அளிப்பர்.

இந்த நாட்டில்நிதி அளிப்பவர்கள், உலக அளவில் நிதியளிக்க வேண்டுமென்றால் அவர்கள் முதலில் தேடிப்போய் கொடுப்பது ரெட் கிராஸ் (செஞ்சிலுவைச் சங்கம்) கிட்ட தான். தனி நபர் நிதிக்கு கோஃபண்ட்மி போன்ற சில.

இந்திய மக்கள் ஓடிப்போய் கொடுப்பது சேவா மற்றும் Aid India மற்றும் இன்னும் சில தனிப்பட்ட நிறுவனங்களுக்கு.

உலகளவில் ரெட் கிராஸின் கட்டமைப்பு ஒவ்வொரு ஊரிலும் மாநிலத்திலும் குறிப்பாக அமெரிக்காவில் பரவலாக உண்டு. பேரிடர் காலங்களில் அவர்களால் துரிதமாக இறங்க முடியும். அத்தகைய கட்டமைப்பு கொண்டது. எந்த ஒரு நாட்டிற்கும் அவர்களால் விரைவாகச் சென்று பணியில் இறங்க முடியும், மனமுவந்து செய்வார்கள்.

ஆனால் இவர்களுக்கு கொடுக்கப்படும் நிதித்தொகையில் ஒரு கணிசமான பகுதி இவர்கள் கட்டமைப்பிற்குச் செல்லும். மற்றவை நிவாரணங்களுக்குச் செல்லும். கட்டமைப்பு இருந்தால் தான் செயல்பட முடியும். ஆகவே ஒரு அரசு இவர்களுக்கு ஒதுக்கும் நிதி இது இரண்டையும் கணக்கில் கொண்டே கொடுக்கும்.

இப்போது ரெட்கிராஸ் தவிர மற்ற சேவை நிறுவனங்களைப் பார்த்தோமானால், SEWA மற்றும் AID india மற்றும் பிற சேவை நிறுவனங்கள் தங்களோட கட்டமைப்பை இந்தியாவில் எங்கு நிறுவியுள்ளதோ அந்தப் பகுதிகளில் தான் அவர்களால் பணியாற்ற முடியும். மற்ற இடங்களில் உள்ள என்ஜிஓ மற்றும் பிற ஸ்தாபனங்கள் மூலமாகத் தான் அவர்கள் தங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள நிதியை வைத்து அவர்களால் நிவாரணம் வழங்க முடியும்.

ஆதலால் 
ஒன்றிற்கு கொடு, இதற்கு கொடுக்காதே; 
அவங்க அப்படிப்பட்டவங்க, இவங்க இப்படிப்பட்டவங்க;
இது அந்த மாதிரி அமைப்பு, இது இந்த மாதிரி அமைப்பு;
இது அந்த மதம், இது இந்த மதம்;
இது வடக்கு, இது தெற்கு;
இது 10 வருட தொடர்பு, 50, 70, 100, 1000 வருட தொடர்பு, அதனால கொடுக்கோம் கொடுக்கிறாங்க;
அவங்க கிட்ட கொடுக்கிலை, இவங்க கிட்ட கொடுக்கிறாங்க;
கொடுத்தது வடக்குல தான் போச்சு, தெற்குல போல;
மைய அரசு கிட்ட போகலை, மாநில அரசுகிட்ட போகலை;
அது ஆர்எஸ்எஸ் அமைப்பு, இது கிறித்துவ அமைப்பு, இது முஸ்லீம் அமைப்பு;
ன்னு இஷ்டத்துக்கு வரையறை பண்ணிகிட்டு
ஒரு பேரிடர் காலத்துல நிவாரணம் கொண்டு போய் சேர வேண்டிய நேரத்தில் உளறுவது பினாத்துவது, தான் படிச்ச படிப்புக்கும் அழகல்ல, செயலுக்கும் அழகல்ல, சொல்ல வேண்டிய நேரமும் இதுவல்ல, அது எப்போதுமில்லை.

வலது கையில கொடுக்கிற நிதி இடது கைக்குத் தெரியாம கொடுப்பது பேர் தான் தானம்.

உலக அளவில் அமெரிக்க ஐரோப்பிய மற்றும் பல நாடுகள் தங்கள் நிதியை பகிர்ந்து அளிக்கும் போது தெளிவாகவே ஒவ்வொரு அமைப்பிற்கும் எவ்வளவு போகும்ன்னு தெளிவாகவே போகும். அது எல்லாத்தையும் ரெட் கிராஸ்ட்ட கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்காது. அந்தந்த நாட்டிற்குள் எந்த இடத்திற்கு எது எது செல்லவேண்டும் என்பதை பிரித்தே அனுப்பும். நிதி பெறும் நாடுகளும் இவற்றை எப்போதும் தெரிந்தே பெற்றுக்கொள்ளும். 

ஜப்பான், சீனா, இன்னும் சில நாடுகளே பேரிடர் காலங்களில் உலக நிதியைத் தவிர்த்திடும். அதற்கு காரணங்களும் அவர்களிடம் உண்டு.

இப்ப இன்னாத்துக்கு இதுங்கறீங்களா?

வாட்சப்புல போனா ஒவ்வொரு க்ரூப்பலையும், குடும்ப க்ரூப்பலையும், இதே பேச்சு! யார்ட்ட கொடுக்கனும், யார்ட்ட கொடுக்கலை, யார்ட்ட கொடுக்கக் கூடாதுன்னு. சகிக்கலை.

சிலர் நிதி கொடுக்கலைன்னாலும் கொடுக்கிறவனைப்பற்றி நொரண்டி சுரண்டிகிட்டு இல்லாம இருந்தால்

(நமக்கு இதெல்லாம் கண்ணில் படாமலிருந்தால்)
வாழ்வினிது
ओलै सिरिय !

No comments: