Thursday, February 11, 2021

மனதுள் ஆடும் சலங்கை இந்நாள்

 
மனதிலிருப்பதைச் சொல்ல மனசில்லை

   எதையும் சொல்ல தெளிவில்லை

எழுதியதை அழிப்பதில் உசுரில்லை

   பின் கை கட்டி நிற்பதில் வீரமில்லை!


ஆத்ம சிந்தனை வலிமை தரும்

   தெளிந்த வார்த்தைகள் ஒளி தரும்

அழியாத சுரங்கம் அள்ளித் தரும்

   உள்ளார்ந்த ஈர்ப்பில் வாசம் தரும்!


என்னில் என்னை நானறியேன்

  எண்ணங்கள் என்னில் காணறியேன்

பிறர் தரும் பாசம் நானறியேன்

   உற்றார் வாசம் எனதறியேன்!


வாழ்வில் கலந்தவை பஞ்சபூதம்

  என்னுள் உறைவது அற்புதம்

பிறர்தன் ஏற்பில் அமுதபதம்

  என்றோ கிடைப்பதில் பரமபதம்!


மனதுள் ஆடும் சலங்கை இந்நாள்!

Wednesday, February 10, 2021

நினைவு நாள் ஒன்றில் இது

 

நினைவலைகளாய் மாறிப்போயினர்

  நீண்டதொரு பயணம் முடிந்து

இடைப்பட்ட ஊர்களில் 

  கொடிமரமாய் நின்றெழுந்தனர்!


வழிதடங்கள் தந்த சுமைகள் எதையும்

  ஐந்து பைசா கடவுள் தட்டில் இறக்கிடுவர்

சுமையிறங்கிய தோள்களில் சுமப்பர்

   தன் விழுதுகளின் சுமைதனை!


கொடி அசைத்து செல்லும் பாதையில்

  வழி நெடுக மரம் நட்டனர்!

கிளைகள் இன்று செழிப்பாய் வளர

  உரமாய் நின்றனர் வாழ்நாள் முழுதும்!


ஆசைதனை அளவிட்டு அகப்படாத போதும்

   இருப்பவையை அளவிடாமல் கொடுத்து

வயிற்றையும் உறவையும் போற்றி 

    ஒரு சேர்ந்து வாழ உரமிட்டனர்!


காலம் கழிந்து கடமைகள் முடிந்து

    வந்த பணி நிறைவுற்று

 உடல் விட்டு சென்றாலும்

    நீங்கா நினைவாய்ப் போயினர்!


விட்டுச்சென்ற நினைவலைகள்

   சுமையை விட கனமாய் நிற்க

நினைவு சின்னமாய்

    அவர் தந்த அழகிய தருணங்கள்!


நினைவு நாள் ஒன்றில் இது!

Saturday, February 6, 2021

தனி சுகம் தரும் ஒரு நாள்

 

கண்ணாடி ஜன்னலின் வழி வரும்

  சூரியக்கதிரின் சூடு தரும் சுகம்

பின் சூழலில் புன்னாகவராளி 

  இசை தரும் ஒரு தனி சுகம்!


உறையும் குளிரில் பகலவனின் சூடு இதம்

   லஜ்ஜையின்றி சூட்டில் உறங்கும் சுகம் தனி

வெயிலைக் கண்டு குளிரிலிறங்க

    மனமின்றி மறுக்கும் உடல் தனி சுகம்!


குளிர்கால சோம்பலில் 

    மடங்கிக்கிடக்கும் தனி சுகம் 

 கை கால் அசையாமல் 

    வாய் கொறிக்கத் தேடும் தனி சுகம்!


சோம்பலில் உழைக்க மறுக்கும்

    வலிந்த உடல் தனி சுகம்

அவையின் திசை நோக்காமல்

   வெயிலில் உறைவது தனி சுகம்!


தனி சுகம் தரும் ஒரு நாள்!

Sunday, January 10, 2021

நிதானம் அவசியமாம்

 இரவு தூங்கப் போகும் போது சங்கடங்கள் வந்தால் என்ன செய்ய!

பையனுக்கு புதிதாய் வாங்கிய மேக் ஏர் எப்படி இருக்கு பார்க்கலாம்ன்னு பையன் வெளிய போனவுடனே அதை எடுத்து நோண்ட ஆரம்பிச்சேன். வந்தா என்னோடத ஏன் எடுத்தேன்னு கத்துவான், அதுக்குள்ள ஒழுங்கா வச்சிரலாம்ன்னு எடுத்தேன்.

இரவு லேட்டா வந்தவன் தன் ரூமுக்குப் போயிட்டு ஷாக் அடிச்சவன் மாதிரி திரும்பி வந்து என் லேப்டாப்ஐத் தொட்டது யாருன்னு கத்தினான். அவனுக்குத் தெரியும் என்னைத் தவிர யாரும் செய்ய மாட்டாங்கன்னு.

என்னடா ஆச்சுன்னு கேட்டா, புத்தும் புது மேக் freeze ஆகி லாகின் ப்ராம்ப்டே வரலை. பிளான்க் ஸ்க்ரீன் நிக்குது. என்ன பண்ணினேன்னான்.

ஒன்னுமில்லைடா, ஒரு சிஸ்டம் அப்டேட் இருந்துச்சு அதை ஆன் பண்ணிட்டு வந்தேன்டான்னேன். 

அதைத்தான் செய்யக்கூடாது அது freeze ஆவுதுன்னு எல்லாம் சொல்றாக, இந்த புது எம்1 பிராசஸர்க்கு சரியான அப்டேட் வரலை இன்னும்ன்னு உன்கிட்ட சொன்னேனா இல்லையான்னான்.

அவன் சொன்னதுகப்புறம் தான் அது ஞாபகத்துக்கு வருது.

அவ்வளவு அப்ளிகேஷன்ஸ் டைப் பண்ணி வச்சுருக்கேன், ஏகப்பட்டது திறந்து வச்சுருக்கேன், இப்படி freezeஆகி நிக்குது உள்ளயே நுழைய முடியலைன்னு, ஒரே கிலி அவனுக்கு, என் மேல சக்க கோவம். நொக்கேஸ்தாரு விழியால.

கோவத்துல அதைத் தூக்கிப்போட்டிருவானோன்னு பயம் எனக்கு. அம்புட்டு துட்டும் நட்டமாயிரும்ன்னு கவலை. அவன் இவ்வளவு கஷ்டப்பட்டு பண்ணின அப்ளிகேஷன்ஸ் என்ன ஆகுமோன்னு கவலை. சேவ் ஆகிருக்கும், பேக்கப் இருக்கும். இருந்தாலும் அந்த கவலையில மனசு துவண்டுருச்சு.

லேப்டாப் என் கிட்ட கொடு நான் பார்க்கிறேன்னேன். கடுப்புல கொடுத்தான்.

எல்லா பட்டனையும் தட்டிப் பார்த்தேன். வேலைக்காவல. எப்3 பட்டன் தட்டனிப்ப மல்டிஸ்க்ரீன் வந்துச்சு, தொட்டா மறுபடியும் ப்ரீஸ். என்னடா கொடுமைன்னு அரை மணி போராட்டம் இரவு 11 மணிக்கு மேல.

எப்படி unfreeze பண்றதுன்னு கூகுளாரைக் கேளுடான்னா, நீ கேளுன்னு பதில்.

இதையெல்லாம் பார்த்த அம்மிணி freeze.

கூகுளாண்டவர் வழி சொன்னார். அதைச் சொன்னேன். அப்படி ஒரு பட்டனே கிடையாதுன்னான்.

கூகுளாண்டவர் நம்பித் தானே நம்ம வாழ்க்கை ஓடுது. அதுபடியே செய்தேன்.

பாதியில நின்ன ஆப்பிள் அப்டேட் மறுபடியும் வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு. 

நிதான சுபாவம் புத்தியை freeze பண்ணாம விட்டதால், தூக்கம் போகாம தப்பித்ததால், பையனிடமிருந்து தப்பித்ததால்,

வாழ்வினிது
ओलै सिरिय !

Friday, January 8, 2021

ஜனநாயகத்தை மடைமாற்றும் அத்துமீறல்கள்

 2007-2008ல என்னோட அப்பா அம்மா இங்க வந்துவிட்டு இந்தியா திரும்பும் போது அவர்களுக்கு ஐரோப்பாவில் ஒரே ஒரு ஃப்ளைட் மட்டும் மாறினாப் போதும், சுலபமாக சென்னை போய் இறங்கிறாலாம்ன்னு சார்லட் நகரம் வரைக்கும் போய் அவர்களை ஃப்ளைட் ஏத்தி விட்டேன்.

ஃப்ளைட் செக் இன் முடித்து அவர்களை உள்ளே ப்ளைட் வரைக்கும் கொண்டு போய் விட்டுவிட்டு வர்றேன்னேனு கவுன்டரில் சொன்னேன். என்னோட அப்பா அம்மாவாயிருந்தாலும் நான் அதைத் தான் செய்வேன், கேட்கவே வேணாம், கூட போய்கிட்டே இருன்னு போர்டிங் பாஸ் கொடுத்தவங்க சொன்னாங்க.

கேட் கிட்ட போய் போர்டிங் பண்ற இடத்துல விட்டேன். கேட்ல நின்ன லேடி அவங்களைக் கொண்டு போய் உட்காரவச்சுட்டு வந்தாங்க. போர்டிங் கேட் வெளிய நின்னுகிட்டிருந்த என்னைப்பார்த்து, எதுக்கு இங்க சும்மா நிற்கிற, பேமிலி விட்டு பிரிஞ்சு இருக்கப் போற, எனக்கெல்லாம் ஃபேமிலி முக்கியம், போய் உள்ள அவங்க எப்படி comfortableஆக இருக்காங்களான்னு போய்ப்பாருன்னாங்க கேட்டிலிருந்த அந்த ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி.

உள்ள போய் அம்மா அப்பாவோட பேசிட்டு மத்தவங்களுக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாம்ன்னு ஐந்து நிமிசத்துல வெளிய வந்துட்டேன்.  ஏன் அதுக்குள்ள வந்துட்டேன்னு அவங்க வெளிய வந்த என்னைக் கேட்டாங்க. மறுபடியும் அவங்க என்னிடம், போ போய் அப்பா அம்மாகிட்ட பேசிகிட்டு இரு, நீ எப்ப திரும்ப இந்தியா போய் அவங்களைப் பார்க்கப் போற, போய்ப் பேசு, கேட் மூடும் போது உன்னை வெளிய வரக்கூப்பிடறேன் போன்னு அனுப்பி வச்சாங்க.

இந்த ஒரு ஏர்போர்ட் மட்டுமல்ல. மற்ற ஏர்போர்ட்களிலும் இது மாதிரி அநுபவம் எனக்குண்டு. பலரை ஏற்றிவிடும் போதும் வந்தவர்களை வரவேற்கும் போதும் கேட் பக்கத்துல போய்த் தான் கூட்டி வருவேன்.

அந்தளவுக்கு சுதந்திரமாக இருந்த நாட்டை இப்போது ஒவ்வொரு ஏர்போர்ட்டையும் கோட்டைச்சுவராக மாற்ற வேண்டிய கட்டாயமாகிவிட்டது. இன்றைய தலைமுறைக்கு இந்நாடு இப்படி கூட இருந்ததுன்னு இனி புத்தகங்கள் வழியாகத் தெரிந்து கொண்டால் தான்.

இந்த வாரம் கேபிடல் ஹில்லில் நடந்து முடிந்துள்ள நிகழ்வு முந்தய இரட்டை கோபுர நிகழ்வு போல் ஒரு மிக சீரியசான நிகழ்வு.

வரப்போகிற மாற்றங்கள் இனி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ஊரிலும் பிரதிபலிக்கப் போகிறது.

வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க அதிபர் ஒருவர் பதவி முடிந்தவுடன் சிறை தண்டனை பெறுவதை பார்க்க வேண்டி வந்தாலும் வரும்.

ஜனநாயக உரிமைகளை அத்துமீறி உபயோகப்படுத்தி ஒரு தீவிரவாதப்பாதையில் நோக்கி நடந்தால் இருக்கும் உரிமைகளையும் இழந்து ஜனநாயக நாட்டை சர்வாதிகாரப்பாதையில் செல்ல வைப்பதைப் போன்ற முட்டாள்தனத்தை நேரடியாக கண்டு அநுபவிக்கப் போகும் சந்ததியாக நாம் உள்ளோம்.

ஜனநாயகக் கவலைகள்!

ஜனநாயக உரிமைகளை அத்துமீறாமலிருந்தால்

வாழ்வினிது
ओलै सिरिय !

Sunday, January 3, 2021

தனி மனித சுதந்திரம் தழைக்க கவலை கொல்

 இது வரை மக்கள் சமூகம் கண்டுள்ள பலவகையான ஆட்சி அமைப்புகளில் மிகவும் வலுவற்ற அமைப்பு ஒரு ஜனநாயக அரசு ஆட்சி அமைப்பு. ஆனால் இந்த அமைப்பில் தான் மக்கள் தங்களுக்கு வேண்டியவர்களை தேர்ந்தெடுக்க முடியும், வெளயேற்றமுடியும், சாதாரணமான மனிதன் மற்றும்  அரசியல் அறிவு அற்றவரையும், எவரையும் கூட ஆட்சியில் அமர்த்த முடியும், ஏதாவது ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்க முடியும்.

பிறகு ஏன் இதை வலுவற்ற அமைப்பு என்கிறேன்?

தேர்ந்தெடுக்கும் ஜனநாயகப் பாதையை, தேர்தல் பாதையை தனக்கு ஏற்றவாறு எவ்வாறு வேண்டுமானாலும் வளைக்கக் கூடிய ஒரு நம்பர் கேம் ஆடக்கூடிய வலுவற்ற அமைப்பு. தேர்தெடுக்கப்பட்டவர்களோ அல்லது சபையோ அல்லது நீதிமன்றமோ அல்லது ஜனநாயக அமைப்பின் ஏதோ ஒரு தூண் கூட மக்கள் தேர்ந்தெடுத்தவற்றைப் புரட்டிப்போட முடியும். அத்தகைய வலுவற்றது இது.

இத்தகைய ஒரு வலுவற்ற அமைப்பு தேவையா?

கண்டிப்பாகத் தேவை. ஒரு தனி மனிதன் சுயமாக முன்னேற, தன் சுயத்தை வெளிப்படுத்த, தனது உரிமைகளைப் பேசக்கூட, ஏன் அதிகாரத்தை எதிர்த்து நிற்கக் கூடியதற்குக் கூட இந்த அமைப்பில் மட்டுமே சாத்தியம்.

மற்ற மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி, மத அரசியில் ஆட்சி, இப்போது சில நாடுகளில் இருக்கும் மக்கள் ஜனநாயக சோஷலிச ஆட்சியில் கூட, அதை எதிர்ப்பவர்களைக் காலி பண்ணிவிடுவார்கள், உள்ளே தள்ளிவிடுவார்கள். எதிர்ப்புகளை எளிதாய்க் கிள்ளி எறிந்து விடுவார்கள்.

இப்போது அதற்கென்ன?

இருக்கு. அமெரிக்க ஜனநாயக தேர்தலமைப்பைப் புரட்டிப்போட அவ்வளவு தகுடுதத்தங்களும் கண் முன்னே நடந்து வருகிறது. ஒவ்வொரு தூணையும் அசைத்து அசைத்து கடைசியாக இந்த வாரம் இன்னொரு தூணின் செயல் எவ்வாறு இருக்கப்போகிறது என்பது கண் முன்னே தெரிகிறது.

ஜனநாயகத் தேர்தல் முறையை அசைக்கும் எந்த ஒரு நிகழ்வையும் கவலையோடு பார்க்க வேண்டிய ஒன்று. தவறான செயல்களால் ஜனநாயக அமைப்பு கேலிக்குறியானால் தனிமனித சுதந்திரம் கழன்று ஓடி விடும். 

இழப்பு வெறும் அமெரிக்க ஜனநாயகத்திற்கு மட்டுமன்று. உலகிற்கேப் பாடமாய் நின்று விடும். 

ஜனநாயக மரபைக் காப்பாற்றினால்
வாழ்வினிது
ओलै सिरिय !

Saturday, January 2, 2021

பழையன புதிதல்

 இங்கு வந்தப்ப சம்பளம் மாதம் 2500. அதுக்குள்ள தான் இருவர் வாழனும். அந்த காலகட்டத்துல லேப்டாப் மார்க்கெட்ல வரலை. எங்கும் டெஸ்க்டாப் தான். ஒரு சாதாரண எச்பி கம்ப்யூட்டர் 1800$. வாங்குற சம்பளத்துல 1800 போட்டு வாங்க இயலாது. பேங்க் லோன் அல்லது கிரெடிட் கார்ட் லோன்ல தான் சாத்தியம்.

எனக்காவது ஆபீஸ் டெஸ்க்டாப்ல காலம் ஓடிடுது. ஆனால் வீட்டுல இருந்த அம்மிணிக்கு கம்ப்யூட்டர் இல்லாம எதுவும் செய்ய முடியாத நிலை. ஏதோ காரணம் சொல்லி ஒரு வருடம் ஓட்டிட்டேன்.

எங்க ஊர் வழியாப்போன உறவுக்காரப்பையன் அவன் கார் நின்னதால என் அபார்ட்மண்டுக்கு வந்தான். வந்தவன்ட்ட அம்மிணி புலம்ப, அவன் போகும் போது அண்ணா நீ செய்யறது பெரிய தப்பு அது இதுன்னு திட்டிட்டுப் போயிட்டான். அவன் போன உடனே ரொம்ப வருத்தமாப் போச்சு. உறவுகளுக்கிடையில் நம்ம மானம் போகப்போவுதுன்னு உறைக்க ஆரம்பிக்க, கொஞ்ச நாளில் கம்ப்யூட்டர் வாங்கிட்டேன். அது கிட்டத்தட்ட 5-6 வருடம் ஓடிச்சு.

அந்த படிப்பினையிலிருந்து, ஒவ்வொரு தேங்க்ஸ்கிவிங் சேல்ஸ் அப்ப, ஸ்டேபுள்ஸ் ஆபீஸ்டிப்போ என பல கடைகளுக்குப் போய் அந்த சமயத்துல இவங்க ரொம்ப சீப்பாக கொடுக்கிற கம்ப்யூட்டர் பார்ட்ஸ் ஒவ்வொன்னும் 20, 25$க்குள்ள வர்றது எல்லாம் வாங்கி வைப்பேன். அதை வச்சு இருக்கிற சிஸ்டத்தை அப்கிரேட் பண்ணி பண்ணி காலத்தை ஓட்டிகிட்டிருந்தேன்.

இரண்டு மூனு வருசத்துல தேவையானது சேர்ந்த பாகங்கள் அதிகமாக, பழசு புட்டுக்க, இருக்கிற பார்ட்ஸ் வச்சு, பழைய மதர்போர்ட் எடுத்துபுட்டு புது மதர்போர்ட் பிரசாஸர் எல்லாம் மாத்தி 200-300க்குள்ள ஒரு டெஸ்க்டாப் பண்ணி அதை வச்சு கொஞ்ச காலம் ஓட்டிகிட்டிருந்தேன். 

லேப்டாப் மார்க்கெட்ல வர ஆரம்பிச்ச பிறகும் இது ஓடுச்சு, ஆனால் லேப்டாப் வாங்கி, அதை அப்கிரேட் பண்ணி ஓட்டறதுன்னே பிறகு காலம் ஓடிச்சு.

மூன்று வருடம் முன்ன வந்த தேங்கஸ்கிவிங் சேல் ல லேப்டாப் 200-225க்கு கிடைக்க எனக்கு ஒன்னு (8gb மெமரியோட) யூஸ் பண்ண, இன்னொன்னு 4gb தான், ஊர் போகும் போது உறவினர்க்கு கொடுத்தரலாம்ன்னு ஒரு வருசமா வாங்கி டப்பா ஓபன் பண்ணாம வச்சிருந்தேன்.  

அதை அம்மிணி தனக்கு வேணும்ன்னு எடுத்துக்கிட்டாப்புல. எடுத்து கிட்ட அன்னியிலிருந்து இது ஸ்லோவ் ஸ்லோவ்ன்னு தினமும் அதை யூஸ் பண்ணும் போதெல்லாம் கம்ப்ளைண்ட். 200$ க்குத் தர்றவன் என்னத்தைப் பெருசாக் கொடுத்திறப் போறான்.

போன வருசம் முழுதும் அதைக் கழட்டி எப்படி அப்கிரேட் பண்ணலாம்ன்னு ட்ரை பண்ணா, பின்னாடி மூடியைத் திறக்கவே வரலை. சரின்னு விட்டுட்டேன்.

இப்ப எல்லோரும் wfh ஆனதாலையும் சீனாவோட போடற சண்டையினாலும் எல்லா கம்ப்யூட்டர் விலையும் அநியாயத்துக்கு ஏறிருச்சு. பையனோட மேக்  புட்டுகிச்சு, என்னோடத எடுத்துட்டுப் போய் ஸ்கூல்க்கு உபயோகப்படுத்திகிட்டிருந்தான். தினமும் அந்த 8gbயும் ஸ்லோவ்ன்னு திட்டிகிட்டிருந்தான். இப்ப புது மேக் வாங்கிக் கொடுத்ததுக்கப்புறம் கம்பளைண்ட் இல்ல.

இந்த மூனு பழைய லேப்டாப்பும் எப்படி அப்கிரேட் பண்றது, திறக்க முடியலைன்னு நினைச்சேன். கடையில போய் கேட்டேன். மெமரிக்கு அமேசானை விட விலை ஜாஸ்தி மட்டுமல்ல, லேபர் விலையும் சேர்த்து ஒவ்வொன்னுக்கும் 100க்கு மேலச் சொன்னான். சரி ஒன்னு அம்மிணிது மட்டும் பண்ணிரலாம்ன்னு கொடுத்தேன். ஒரு வாரம் கழிச்சு டைம் கொடுத்தான். 

கடைசியா ஒரு வார்த்தை கேட்டேன், இதை ஏன் என்னாலத் திறக்க முடியலைன்னேன். மறைந்திருந்த ஸ்கூரூவைக் காண்பிச்சான். முடிந்தது கதை. பிறகு வர்றேன்னு வந்துட்டேன்.

அமேசான்ல மூனு லேப்டாப்க்கும் மெமரி ஆர்டர் பண்ணி மாத்தியாச்சு. அது மட்டுமல்ல எச்பி, இன்டல், ஏஎம்டி, ரேடியான் கிராபிக்ஸ் வெப்சைட் போய் எல்லாம் புதுசாடவுன்லோட் பண்ணி எல்லாம் அப்டுடேட் ஆக்கியாச்சு. பறக்குது இப்ப. இன்னும் 3-4 வருசத்துக்கு கவலையில்லை ஓடும்.

போன பத்து நாளா இதைத்தான் நோண்டி நோண்டி ஒவ்வொன்னா சரி பண்ணியாச்சு. நம்ம பீத்தல் சும்மாயிருக்குமா, அண்ணன்ட்ட பீத்த, அவனுதை அப்கிரேட் பண்றது அடுத்த பிராஜக்ட்.

வாழ்வினிது
ओलै सिरिय !