Saturday, July 8, 2023

மொழித்திணிப்பு ஏன்

தற்சமயம் ஒரே சமயத்தில் சம்ஸ்கிரதமும் ஸ்பானிஷ்ஷும் படித்து கற்று வருவதால் இரண்டையும் புரிந்து கொள்ள ஒரு இணைப்பு மொழியாக ஆங்கிலம்தானிருக்கு! அதைத் தான் இப்போது உபயோகிக்கிறேன்.

சம்ஸ்கிரதம் கத்துக்க முதலில் ஒரு 450 பக்கம் கொண்ட புத்தகத்தை வாசித்து முடித்து விட்டேன். அதில் இதன் இலக்கணத்தைப் புரிந்து கொண்டாலும் ஒரு மொழியை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள அது போதுவானதாக இல்லை.

ஆதலால் ஒரு சம்ஸ்கிரத காப்பியத்தையும் சேர்ந்து படிப்போம், அப்போது இதில் கற்ற சம்ஸ்கிரத இலக்கணத்தை இன்னும் நன்கு புரிந்து கொள்ள ஏன் பகவத்கீதை படிக்கக் கூடாது என்று தோன்றியது.

அன்னிபெசண்ட் அம்மையாரும் பகவன்தாஸ் அவர்களும் தியோசாபிகல் சொசைட்டி மூலம் 1905ல் வெளியிட்ட பகவத்கீதை புத்தகத்தின் பிடிஎஃப் இணையத்தில் பரவலாக கிடைத்ததால் அதை எடுத்துப்படிக்க ஆரம்பித்தேன்.

கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் (இதை ஸ்லோகம் என்று சொல்ல விருப்பமில்லாதவர்கள் செய்யுள் நடை உரை என்று எடுத்துக் கொள்ளலாம்) ஆங்கிலத்தில் விரிவான அர்த்தம், மற்றும் அதை விடச் சிறப்பாக சம்ஸ்கிரத வார்த்தைகளை ஒவ்வொரு கீதையிலும் எப்படி சந்தி பிரித்து எழுதுவது, அர்த்தம் கொள்வது என மிகப்பிரமாதமாகக் கொடுத்துள்ளனர் இந்த புத்தகத்தில்.

இப்போது இதைப் படிக்கும் போது முதலில் படித்த அந்த சம்ஸ்கிரத புத்தகத்தின் 450 பக்கங்களின் அவசியம் இப்போது மிகவும் தேவைப்பட்டது. ஆகவே, அந்த புத்தகத்தை திரும்ப வாசிக்க எடுத்து ஆரம்பித்து அதன் 200வது பக்கத்தில் எனது இரண்டாவது தடவை வாசிப்பில் நிற்கிறேன்.

இந்த கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு 100 வருடத்திற்கு முந்தையது. சிலவை செய்யுள்/poetry வடிவில் அர்த்தம் மொழி பெயர்த்து கூறப்பட்டுள்ளது. பல ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. ஏனெனில்அவை இன்றைய உபயோகத்தில் இல்லாத ஆங்கில வார்த்தைகள்.

சம்ஸ்கிரதத்தில் சந்தி பிரித்து அர்த்தம் இருந்தாலும், சம்ஸ்கிரதத்தில் அதன் வாக்கிய அமைப்பில வார்த்தைகள் ( subject verb object) பலவித மாற்றங்களோடு மாறி மாறி வரும். மிக விரிவானதொரு மொழி. அதை வைத்து, அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை வைத்து, அந்த முழு கீதை ஸ்லோகத்தின் அர்த்தத்தைக் கூட்டி அமைப்பது சிரமமாக இருக்கு!

ஆகவே இன்னொரு கீதை புத்தகம் சம்ஸ்கிரதம்-தமிழ் மொழிபெயர்ப்போடு எடுத்து படித்து வருகிறேன். ஆங்கிலத்தில் தெரியாத வார்த்தைகளுக்கு இப்போது தமிழில் அர்த்தம் எளிதாகப் புரிவதால், அந்த ஸ்லோகத்திலுள்ள ஒவ்வொரு சம்ஸ்கிரத வார்த்தைக்கும் அர்த்தம் புரிகிறது. சம்ஸ்கிரத மொழியின் சந்தி அதன் இலக்கணம் இப்போது புரிய வருகிறது.

ஏன் இந்த சிக்கல்? 

இத்தனை வருடம் ஆங்கிலம் கற்றும் பேசியும் இருந்தும், ஆனால் அதிலுள்ள நிறைய வார்த்தைகள் புழக்கத்தில் இல்லாததாலும், ஆங்கிலத்தை முழுமையாக கற்பதில் நம்மில் பலரிடம் உள்ள சிரமத்தை என்னிடம் இப்போது பார்க்க முடிகிறது!

ஏன் இந்த கஷ்டம்?

ஆங்கிலம் நம்மேல் திணிக்கப்பட்ட மொழி. நம் தாய்மொழியல்ல அது. அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் நாம் நம் தாய் மொழியிலுள்ள அதே வார்த்தையைத் தேடி ஓடுகிறோம்.

ஸ்பானிஷ் கற்பதிலும் உள்ள சிரமம் இது தான். ஸ்பானிஷ் மக்களுக்கும் ஆங்கிலம் கற்பதில் உள்ள சிரமமும் மிக அதிகம். அவர்களும் இதே போல் அவர்கள் தாய்மொழியில் வார்த்தைகளைத் தேடுகிறார்கள்.

இத்தகைய ஆங்கிலத் திணிப்பு நம்மீது ஏன், எதனால், யாரால்?

பதிவு நீண்டு விட்டது. அடுத்ததில் பார்ப்போம்!

அனைத்தையும் சகிப்புத்தன்மையுடன் கற்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Aprende todo todos los días!
மே 31 2023

No comments: