Monday, April 6, 2020

போன் செய்ய முடியாத இரவுகள்

கடந்த பத்து-15 வருடமாக இந்திய நேரம் காலை 6.30-7க்குள் அம்மாவிற்கு தினமும் போன் பண்ணுவேன். ஹரிகேசநல்லூரோ சிவகுமாரோ சொல்லும் ஜோசியத்துல அம்மா டேய் இன்னிக்கு உனக்கு சந்திராஷ்டம்டா, டேய் இன்னிக்கு எனக்கு சந்திராஷ்டம்டா, நாம பேசாம இருக்கிறதே நல்லதுடான்னு சொல்லிண்டே, அம்மா நமக்கு தினமுமே சந்திராஷ்டம்மா, விடு நம்மபடி போவோம்ன்னு பேச்சு தினமும் ஓடும்.

இனி அந்த காலை 6.30 மணி கால் 10-15 வருடமாக பண்ணிகிட்டிருந்தது, இனி யாருக்கு பண்ணுவதுன்னு முழிக்கிற நேரமாயிடுச்சு. இங்க இரவு 9மணி ஆனாலே அம்மாக்கு பண்ணனும்ங்கிற துடிப்பு அம்மா உயிர் அடங்கினாலும் எனக்கு இன்னும் அடங்க மாட்டேங்குது.

அம்மா காலமாகி இந்த வாரம் அறுபது நாள் ஆகப்போவுது. ஆறு வருடம் முன் அப்பா போன போது கூட இருக்க முடியாத வேதனை இன்னும் வலிக்குது. அந்த குற்றம் அம்மா விசயத்துல செய்திடக்கூடாதுன்னு ரொம்ப இருந்தேன். செய்ய முடிந்தது.

டிசம்பர்ல அம்மாவோட 5 வாரம் பெங்களூர்ல இருந்தேன். இந்தியாவவிட்டு வந்து பல வருடமாகிவிட்டது. ஒவ்வொரு தடவை போகும் போதும் பல்வேறு தடங்கல்கள், சிரமங்கள். உறவினர் உதவி இல்லாம எதுவுமே செய்ய முடியாத நிலை. இந்த தடவை அப்படி இருக்கக்கூடாதுன்னு, இந்தியாவுல வாழ கத்துகிட்டேன். இருந்த 5 வாரமும் தினமும் படிப்பினைகள். தினமும் ஏதாவது ஒரு தொல்லை அல்லது கஷ்டம் வரும். தனியா சமாளிக்க முயற்சி செய்தேன். இனி அங்க போனா ஐக்கியமாயிர முடியும்கிற அளவுக்கு நிறைய கத்துகிட்டேன்.

இனி அது தேவையில்லைன்னு ஆயிடுச்சு. அவ்வளவு தெளிவா ரொம்ப என்னோட பேசிகிட்டிருந்த அம்மா இவ்வளவு சீக்கிரம் சுருண்டு தன் வாழ்வை முடித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை!

டிசம்பரிலேயே அம்மா உடல்நலம் சரியில்லைன்ன போதே மூன்று ஆஸ்பத்திரிகள் கூட்டிப் போய் பார்த்தேன். எல்லா மருத்துவர்களும் அதையே தான் சொன்னார்கள். இன்னும் இரண்டு மாதம் தான்னு. ஆனால் அம்மாவோட தெளிவான பதில்கள் பேச்சுகள் எப்படியும் ஐந்தாறு மாதம் ஓடும், இனி அடிக்கடி வந்து போய்தான் ஆவனும்கிற நிலமை.

டாக்டர்கள் மிகதெளிவாகவே சொல்லிவிட்டார்கள். இந்த பேஷண்டை வீட்டுல வச்சுக்கமுடியாதுன்னுட்டாங்க. கூட்டிப்போன சில ஆஸ்பிட்டலகளில் ஒரு நாளுக்கு 30கே-40கே, வேறு இடம் மாற்றினால், 17கே மற்றும் மருந்து ஊசி ஐவி செட் முதல் எல்லாமே நாம தான் வாங்கிக்கொடுக்கனும். இன்சூரன்ஸ் வயதானவர்களுக்கு கிடைப்பது சிரமம். கிடைப்பதும் குறைவான அமௌண்ட்டுக்கு.

நான் பிப்ரவரியில் மறுபடியும் போன மறுநாளே மறைந்து விட்டாரகள். நான் வந்திருக்கிறேன் என்று சொன்னவுடன் தலை திரும்பி பார்க்க்முயன்றார்கள். முடியவில்லை. அதுவே கடைசி.

டிசம்பரில் நான் போனப்பவே 3 ஹாஸ்பிட்டலிலும் ஐசியு ஃபுல். உள்ள அட்மிட் ஆவதும் சிரமம். ஆயிட்டா டிஸ்சார்ஜ் ஆவதும் சிரமம். இடைப்பட்ட நாட்களில் பில் சில லட்சங்களைத் தொட்டுவிடும். முன்கூட்டி தினமும் பணம் கட்டினால் தான் மருத்துவமே!

அம்மா கொரோனா வேதனைகளையும் சேர்த்து யாரும் அநுபவிக்க வேணாம்ன்னு தெரிஞ்சோ என்னவோ சீக்கிரம் முடிச்சுகிட்டாங்க. அம்மாவை மார்ட்சுவரிக்கு தூக்கிட்டு போய் பின்னர் உடன்பிறப்புகள் வந்தவுடன் கூடவே ஆம்புலன்ஸில் எடுத்து வந்தது மட்டுமல்ல, எரிப்பது கரைப்பது என்கிற எல்லா unhygienic செயல்களிலும் என் உடம்பு ஈடு கொடுக்கலை. இப்ப ஒரு மாதமாக கிடைத்த ஸ்டே அட் ஹோம் தான் இப்ப கிடைத்த ரெஸ்டே!

அம்மாவுடன் பேசிய பழைய நாட்கள் இனி கிடைக்கப் போவதில்லை. ஆனால் போகும் முன் தன்னோடு அருகிலிருந்த சில நல்ல மனிதர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அந்த நல்ல மனிதர்களை சந்திக்கும் போது நினைக்கும் போது அம்மாவின் நினைவுகள் மனதிலிருக்கும்.

போன் கால் செய்ய முடியாத ஓர் இரவில்!

Tuesday, November 26, 2019

நீண்டதொரு பயணம் அது

நீண்டதொரு பயணம் அது

நீண்டதொரு பயணத்தில்
  உடன் பயணித்தவர்கள் இறங்கிவிட்டனர்!
பயனத்தின் களைப்பை உணரும் முன்
  விட்டுச் சென்ற சருகுகளின் சத்தம் குடைகிறது!

ரயில்சிநேகமான பயணத்தில்
  அசைபோடும் விஷயங்கள் பலவானது
அவற்றில் ஒருமித்தவை சில எதிர்த்தவை பல
  கொண்டு செல்லும் நினைவுகள் காற்று போல் கரைந்தது!

அவர் தம் பயணம் அவரவர் இலக்கு நோக்கி
  ரயில் பெட்டி கொண்டு சென்றதென்னவோ ஒன்றாய்
பெட்டிகள் இணைத்துச் செல்லலாம் ஒரே வழியில்
   மனது என்றும் ஒன்றாய் பயணிப்பதில்லை!

அவரவர் எல்லை அவரவர் நியமிப்பில்
  ரயில் செல்லும் பாதை என்றும் ஒன்றே
தண்டவாளம் இரண்டாய் தெரிவது போல்
  நம் பயணமும் இரு தடங்களில் இருக்கலாம்!

நடைபாதையில் நம் கால்கள் பிரிந்தே செல்லும்
  இலக்கை நோக்கிச் செல்ல இரு கால் தேவை!
இருப்புப்பாதையில் சக்கரங்கள் பிரிந்தே செல்லும்
  இலக்கை அடைய ஒரு பிரிதல் தேவை!

பயணம் ஒன்றே எண்ணம் வேறு
  திசை ஒன்றே மனது வேறு
பாதை ஒன்றே களம் வேறு
  நினைவு ஒன்றே திசை வேறு!

நீண்டதொரு பயணம் அது!

Saturday, October 26, 2019

பெருமாள் ஏகாந்தசேவை

மாதத்தின் கடைசி சனிக்கிழமை உள்ளூர் பெருமாள் கோவிலில் ஏகாந்த சேவைக்கு இரவு அரை மணி நேரம் பெருமாள் முன் வீணை வாசிப்பது அம்மிணிக்கு வழக்கம்.

எப்போதும் எலக்ட்ரிக் அட்டாச்மெண்ட்டோட வர்ற வீணையை எடுத்துப்போகாதே, நம்ம தஞ்சை வீணையை எடுத்துப்போம்பேன். நம் பேச்சு எடுபடாது. சொன்னா கேட்க மாட்டாங்க. வீணையில கிடார் சத்தம் வருதும்பேன். அப்புறம் கடந்த சில மாதங்களாக தஞ்சை வீணையை எடுத்துப் போக ஆரம்பிச்சாங்க!

இன்னிக்கு அம்மிணியோட ஏகாந்தசேவை நேரம். இன்னிக்கு எனக்கு கிச்சன்ல நிறைய வேலை, உன் பேச்சைக் கேட்கப் போவதில்லை, கை வலிக்குது, அதனால அந்த சின்ன வீணையைத் தான் எடுத்துப் போவேன்னு அடம்.

பெருமாள் முன்ன வீணை மற்றும் ஸ்பீக்கர் இறக்கி வச்சுட்டு சிவன் கோவில் போய்ட்டு வந்தா, அம்மணி வீணை நாதம் மெலிதாக எந்த எலக்ட்ரிக் சாதனமின்றி வருது. அம்மணிக்கு முகமே மாறிப்போச்சு. வீணை பேட்டரி செத்துப் போச்சு. ஸ்பீக்கர் வேலை செய்யலை. கோவில் மைக் வைச்சா அதுவும் வேலை செய்யல. அம்மிணிக்கு என்னைப் பார்த்து கோவம், முகம் சோகமா மாறியிருந்து.

எந்த எக்ஸ்டர்னல் equipment எதுவும் தேவையில்லை அப்படியே வாசின்னேன். கடவுளே பார்த்து உனக்கு தீபாவளிக்கு வாசிக்க வாய்ப்பு கொடுத்த மாதிரி இருக்கு, ஒழுங்கா அப்படியே வாசின்னு பின்னாடி போயிட்டேன். முகத்துல ஈயாடல.

அதற்கப்புறம் அன்னமாச்சார்யா மற்றும் பிறர் பாடலை வாசிச்சு முடிச்சவுடனே, வந்த பக்தர்கள் ஒவ்வொருவரும் வந்து ரொம்ப ரொம்ப இனிமையா இருந்ததுன்னு சொன்னவுடனே தான் அம்மிணி முகத்துல மலர்ச்சியே வந்தது.

இதே மாதிரி போன தடவை ராமநவமி அன்னிக்கு சான்ஸ் வந்தப்ப கூட இது மாதிரி தான் ஏதோ குண்டக்க மண்டக்க பேசிகிட்டிருந்தாப்புல. நல்லா திட்டி இழுத்து கிட்டுப் போனேன்.

ஏகாந்தசேவை முடிஞ்சு திரும்பும் போது என் அம்மாக்கு போன்ல நான் சொல்லிகிட்டு இருந்தேன். அம்மா பாரு இவளுக்கு ராமநவமி, தீபாவளி அப்பவெல்லாம் ஏகாந்தசேவைக்கு வாசிக்க சான்ஸ் கிடைக்குது பாரு, கொடுத்து வச்சவன்னேன். கேட்டுகிட்டிருந்த அம்மிணி உடனே, நான் என்னிக்கு நல்லா வாசிக்க முடியலையோ அன்னிக்கு நீ வந்து எல்லாம் தலைகீழா சொல்லிகிட்டு திரியறன்னா! 

வேறென்ன சொல்ல! நான் சொல்ற பேச்சையும் கேட்டு நல்லவீணையையும் எடுத்து வரமாட்ட, நீ வாசிக்கிற நாளோட சிறப்பும் உனக்கு தெரியமாட்டேங்குது! சங்கீத ஞானமேயில்லாத எனக்கு புரியறது உனக்கு புரியமாட்டேங்குதுன்னேன்!

பேசி பிரயோசனமில்லைன்னுட்டாப்புல.

வாழ்க்கையில தானா கிடைக்கிற நல்வாய்ப்புகளை அனுபவிக்கவும் ஒரு பக்குவம் வரனும்.


பெருமாள் மகிமை!

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

நாளைய திருநாள் தீப ஒளித் திருநாள்
சுற்றத்தார் கூடிச் சிறப்பாக்கும் நாள்!
புத்தாடைப்புணிந்து புது மங்கலம் பிறக்க
பெண்டிர் சிறார் குதுகளிக்கும் நாள்!

பட்டாசு வெடித்து பகல் வெளுக்க வைக்கும் நேரம்
காசு கரியானாலும் சிறார் மனசு கரையாது
ஊதுபுகை அலை மோதினாலும்
காற்றுவெளியில் புகையிலையாகாது!

பண்டிகைகள் வந்தால் 
கடைகளில் கூட்டம் வழியிது
கூட்டமிருந்தால் நாடு வளமாகுது
உறவுகள் ஒன்று கூடுது
உள்ளங்கள் மகிழுது!

பண்டிகைகளை நேசிக்கும் நாட்கள்
நாட்டை வளமாக்கும் நாட்கள்
மாசுகுறைவாக வரும் வருங்கால பட்டாசுகள்
வானத்தை மாசற்றதாக்கும் நாட்கள்!

அதுவரை எது எதுவாயினும் 
உற்றார் உறவினர் கூடி
நாளைய நாளை பொன்னாளாக்குக!


இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Thursday, October 24, 2019

தொலைவிற்கோர் தடை கல் நம் அருகில்

முன்னெடுத்துச் செல்ல முனைவதற்குள்
பின்னிழுத்துக்கொள்ள ஓர் தடை மந்திரம்!
எங்கோ அது தொலைவிலில்லை!
அருகில் அசரீரியாய் ஒலிக்கும் எதிரொலி!

தலைநிமிர்ந்து நடக்க எத்தனிக்கும் முன்
தலையிலிடிக்குமாறு வரும் கணைகள்!
எங்கோ அது தொலைவிலில்லை!
அருகிலிருந்து உணர்த்தும் இயலாமை!

வான்வெளியில் மலர்ந்து பயணிக்க எத்துகையில்
காற்றைக் கிழித்து வரும் அம்புகள்!
எங்கோ அது தொலைவிலில்லை!
உன் கை பின்னால் சிக்கிய முட்கள் அவை!

மலர்களைத் தொடுத்து அணிய முற்படுமுன்
மலர் தொடுக்க உதவும் நாறுகளை
இழுத்துப் பிடிக்கத் தெரிந்த உதடுகளுக்கே!
எதுவும் அஃது தொலைவிலில்லை!


தொலைவிற்கோர் தடை கல் நம் அருகில்!

Sunday, September 8, 2019

பிடி ஒரு நினைவில் எனது பாலம்

தினமும் நடந்த பாலம்
  ரொம்ப தூரமாகிப் போச்சு இப்ப
அரசு பள்ளிக்கு பஸ்ஸுல போன பாலம்
   பஸ் தடம் மாறிப் போச்சு இப்ப!

நினைவுகள் நினைந்த கனவு பாலம்
   காலம் கடந்து மாறிப் போச்சு
சைக்கிளேறி மிதித்த பாலம்
    படத்துல பார்க்கிறதா மாறிப்போச்சு!

ஆடிப் பண்டிகைக்கு ஊர் நிறைந்த பாலம்
     அடிமனதில் ஊறிய நினைவாப் போச்சு
தண்ணிப்பந்து பேரிக்காய் பார்த்த பாலம்
    தண்ணியில் ஊறிய காயாகிப் போச்சு!

பாலம் கரை புரண்டு ஓடுற நீராய் நிற்குது
   காணக் கண் எட்டாதூரத்தில் நிக்குது
மனம் கொள்ளும் பார்வை தேடி
  மனது எட்டாய்ப் பறக்குது!

பிடி ஒரு நினைவில் எனது மேட்டூர் பாலம்!

Friday, August 9, 2019

சுவாசமற்ற ஓர் பறிப்பு

வீட்டில் பூட்டி வைத்து பறித்த சுதந்திரம்
   நாளைய விடிதலுக்கு வலுவற்ற நூலிழை!
தலைமுறைகள் மாறிப்போன இடத்தில்
   பறந்து போன வண்டுகள் வந்தென்ன பயன்!

தடிகளும் குண்டுகளும் தலைதான் வாங்கும்
   எஞ்சி நிற்கப்போவது மரமும் செடியும் மட்டுமே!
மண்ணுள் ஒட்டா செடியை பிடுங்கி நட்டாலும்
   மலர்தனைக் கொடுக்காது!

மனித சுதந்திரம் பிறர் தடுப்பில் பறிபோகாது
    பறித்த சுதந்திரம் பலனிற்றி நிற்கும்
அன்பில் இணையா உள்ளங்களை
  தடிகளும் குண்டுகளும் காத்திட முடியாது!

குள்ளநரி திட்டங்களால் சதி செய்யும் மனிதர்கள்
   மண்ணில் ஓர் சாந்தியை பறிக்கலாம்!
மலரிடம் ஒட்டா வண்டுகளின் மகரந்தசேர்க்கையில்
   மலர்வனமும் பாலைவனமும் ஒன்றே!

இழுபறியில் திணிக்கும் ஓர் சுதந்திரம்
    மண்ணின் மக்களின் சுதந்திரமன்று!
ஜனநாயகம் தழைக்க வேண்டிய இடத்தில்
   தாள்பால் போட்ட கதவுகளின் இடையில் சுவாசமில்லை!


சுவாசமற்ற ஓர் பறிப்பு!