Thursday, February 24, 2022

கல்வி தரும் பட்டம் காற்றாடியல்ல

கல்வி என்பது வாங்கி சேர்க்கிற பட்டத்தில் இல்லை என்பது பரவலாக உணர வேண்டிய ஒன்று. கற்பதற்கு வயதுமில்லை, கடைசி வரை கற்க முடியும். ஏளனங்கள் என்றுமே ஏணிகளின் படிகள்.

கற்பதற்கு பொதுவான தடைகள் பெரும்பாலும் குடும்பப் பொருளாதார சூழ்நிலை மற்றும் சுயசார்பு தயக்கங்களே! அதை சமூகத்தின் மேல் போடுவது இயல்பானதாய்ப் பார்க்கிறோம். 

ஐஐடி வளாகத்திற்குள் நுழையாதவர்கள் ஐஐடியில் படித்தவர்களை அடிக்கடி இளக்காரமாக எழுதுவதைப் பார்க்கிறோம். கல்லூரியில் வாங்கும் பட்டங்கள் ஏணிப்படிகள் மட்டும் தான். அவை ஒரு நீண்ட ஒரு வளமான வாழ்க்கைக்கு ஆரம்பப் படிக்கட்டு மட்டுமே. அவை என்றுமே வாழ்க்கையின் உச்சத்தைத் தொட்டுவிடக் கொடுக்கும் வாய்ப்பு இல்லை.

பெரும் வாய்ப்புகளை உபயோகிக்க, மற்றும் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி மேன்மேலும் கற்று உயர்ந்தவர்களால் மட்டுமே ஒரு சுந்தர்பிச்சையாகவோ அல்லது ஒரு விஞ்ஞானியாகவோ பொருளாதார நிபுணராகவோ முடியும். சேர்க்கும் பட்டங்கள் ஒரு வரையறைக்குப் பிறகு பட்டம் விட மட்டுமே உதவும். என் சொந்த மகனே என்னைக் கேட்டிருக்கான். அம்மா வளர்ந்த அளவு நீ வளரவில்லையென.

கல்லூரியில் உடன் படித்த நண்பன் வாங்கியுள்ள பட்டங்களை வரிசைப்படுத்தினால் ஒரு விசிட்டிங்கார்ட் பத்தாது. மிகப்பெரிய கல்லூரியில் அதன் நிர்வாகத்தில் மட்டுமல்ல, கேம்பஸ் ரெக்ரூட்மண்ட் ரிஜிஸ்ட்ரார் கூட. இவரிடம் இரண்டு டாக்டர் பட்டம் கூட உண்டு. ஆனால் இன்று வரை ஆங்கில இலக்கணம் பேசுவதிலும் எழுதுவதிலும் தடுமாற்றம் தான். ஆனால் அவரால் எப்படி இந்த அளவை எட்ட முடிந்தது. தொடர் கல்வி, அயராது உழைப்பு, எல்லாவற்றிற்கும் மேல் சிறந்த குணம் படைத்தவர். பிறரைக் குறை சொல்வதால் நம் வாழ்வு உயராது என்று உணர்ந்தவன். அவரால் பயன் அடைந்தவர்கள் பல மாணவர்கள்.

பிஎம்பி படிக்கும் போது எல்லா requirementsம் பூர்த்தி செய்து எல்லாம் படித்து முடித்து விட்டு, கடைசியாக அப்ளிகேஷனில் மேனேஜரின் கையெழுத்து தேவைப்பட்ட போது அவர்கள் என்னிடம் நேரிடையாகக் கூறியது: நீயெல்லாம் இங்கு மேனேஜர் ஆக முடியாது, எதற்கு இதுன்னு சொல்லிவிட்டு கையெழுத்து போட்டுக் கொடுத்தார்கள். அந்த மேனேஜருக்கு டிகிரி கூட கிடையாது. அவர்களால் இந்த எக்ஸாம் எழுதக்கூட முடியாது. என்ன சொல்வது. கையெழுத்து வாங்கின அந்த பேப்பரை எங்கோ தூக்கி எறிந்து விட்டேன். கற்ற அந்த கல்வி, ஞானம் இன்றும் உதவுகிறது. திறமையாக செயல்பட உதவுகிறது. பட்டம் உதவுவதில்லை.

சமீபத்தில் ஸ்பானிஷ் கற்றுக்க ஆரம்பித்த போது வந்த சிலுசிலுப்புகள் எல்லாம் ஹிந்தி கத்துகிட்டு என்ன பண்ணப்போறோம், பான் பராக் பானிபூரி விற்கவா என்கிற தொனியில் தான். கற்பது நம் புரிதலை விரிவுபடுத்த. நாம் வளர. 

நியாயமாக கிடைக்க வேண்டியவர்களின் வாய்ப்பைத் தடுத்து/தட்டிப் பறித்துப் பெற்ற கல்வியை மறைத்து, சிலர் மேல் பழிபோட்டு சமூகத்தைச் சாடி, தன் மேல் ஏற்றிக்கொள்ளும் அத்தனை பட்டங்களும், சமூகத்தை குறை சொல்லும் மனப்போக்கு எல்லாம் பெற்ற கல்வியை இழிவு படுத்தும் செயல்.

இன்றைய சூழ்நிலையில் கல்வி கற்கும் வாய்ப்பு அனைவருக்கும் இருக்கு. ரிசர்வேஷன் முறையைத் தாண்டியும் வளரக்கூடிய வாய்ப்பு அனைவருக்கும் இருக்கு. ஆனால் அதை உபயோகப்படுத்தி பயனடைந்தவர்களால் மட்டுமே மேலெழ முடியும். சமூகத்தையோ மற்றவர்களையோ குறை சொல்வதால் அல்ல. பொய்யான கட்டமைப்பு அமைப்பது சீட்டுக்கட்டு சரிந்து விழுவது போல் ஒரு நாள் சரிந்து விழும். இந்நாடக உலகத்தில் அனைவரும் நடிகர்களே!

கற்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Escalera!

No comments: