Friday, August 16, 2013

ஆழ்ந்த வாசிப்பு

ஆழ்ந்த வாசிப்பு என்பது என்னிடம் சின்ன வயதிலிருந்தே கிடையாது. வானம்பாடிகள் பாலா சார் அடிக்கடி கிண்டல் பண்ணுவார் 'வாசிக்கணும், படிக்கக் கூடாது'ன்னு. என்னளவில் இரண்டும் ஒன்றாகவே கருதி இருந்து வந்துள்ளேன்.

ஆழ்ந்த வாசிப்பு என்றால் என்ன? படிப்பதை புரிந்து கொண்டு அதை analyse செய்யக் கூடிய பக்குவத்துடன் படித்து உள்வாங்கிக் கொள்ளுதல் என்று கொள்ளலாமா.  எதை அவ்வாறு உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

படிப்பதை தர்க்க ரீதியாக ஆராய்ந்து உபயோகப் படுத்தும் அளவிற்கு எதைத் தேவை என்று எப்போது எடுத்துக் கொள்கிறோமோ அப்போது வாசிப்பதில் கவனம் இருக்கும். உதாரணமாக பரிட்ச்சைக்குப் படிக்கும் போது மனப்பாடம் பண்ணி எக்ஸாம் பாஸ் பண்ண மட்டும் உபயோகப் படுத்துவோம் என்றால் அந்த சமயத்தில் உள்வாங்கி வாசித்தது எத்தனை நாள் நிற்கும். பரீட்சை முடிந்ததும் மறந்து விடும்.

எல்லா வித புத்தகங்களும் பரிக்ஷைக்குத் தேவையானதது  மாதிரியானதா ? இல்லை. அரசியல் பொருளாதார சமூகவியல் புத்தகங்கள் படிக்கும் போது அதை உள்வாங்கி வாசிப்பது மிகவும் தேவையானது. இவைகள் பலகாலம் நம்மிடம் தொடர்ந்து பயணிக்கக் கூடியவை.

வாசிப்பனுபவம் கேட்டும் பெறலாம். சிறந்த அரசியல் மற்றும் பொருளாதார சமூக அறிஞர்களின் பேச்சுக்களை கேட்கும் போது உள்வாங்கி நன்கு புரிந்து ஆராய்ந்திருந்தால் அவை பல காலம் நம்முடன் தொடர்ந்து பயணிக்கும். நமது பேச்சில் அவைகள் கண்டிப்பாக ஒரு உதாரணம் மற்றும் ஆதாரமாக வெளிவரக் கூடும்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் பல உன்னத அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்களின் பேச்சுகளை நேரடியாகக் கேட்டிருக்கிறேன். இப்போது எதுவும் ஞாபகத்தில் இல்லை. அவர்கள் பேசிய பேச்சுகள் மட்டுமே மறந்து விட்டது. அவர்களை சந்தித்த அனுபவம் இடம் ஆகியவை ஞாபகம் இருக்கிறது. எது தேவையோ அது இருப்பதில்லை, தேவையற்றது தொடர்கிறது. காரணம் உள்வாங்கி புரிந்து கொள்ளும் பக்குவம், வயது, அறிவு அப்போதும் இல்லை  இப்போதும் இல்லை.

எந்த ஒரு புத்தகத்தையோ படிக்கும் போது வாசிக்கும் போது அதை ஆராய்ந்து சமூக வாழ்வில் தொடர்பு படுத்தி பார்க்கும் போது அது தேவை அல்லது தேவையற்றது என்று பிரித்து வாசிப்பதின் பயன் பல காலம் நிற்கும். வெறும் ஒரு எழுத்தாளனின் படைப்பை மட்டும் படித்து ஆராதிப்பதின் மூலம் இழப்பது தான் அதிகமாக இருக்கும். காலமும் உலகமும் மாறிக் கொண்டு இருக்கும். நாம் அந்த எழுத்தாளனுடன் பின் தங்கி விடுவோம்.

பரந்த அனுபவம் பெற பல எழுத்தாளர்களின் படைப்பை படித்து புரிந்து கொள்வதில் வரும் அனுபவம், புலமை, பெருமை ஆகியவை  ஒரு குறுகிய வட்டத்தில் அடைத்துக் கொள்ளும் போது எல்லாம் பின் தங்கி விடுகிறது.
படித்தவர்கள் பேசும் போது வெறும் கேட்டு தலையாட்டும் கூட்டமாகி விடுவோம்.

No comments: