Thursday, May 19, 2022

சாத்வீகமாய் வளர்வதில்

பையன்ட்ட கேட்டேன்: என்னடா ஃபோனே வரலை, எங்கடா இருக்கேன்னு. அப்பா இங்க பெரிய fireப்பா, காலையிலிருந்து மூனு மணி நேரமா அங்க தான் வேலை செய்துட்டு இப்ப தான் ஃபயர் ஸ்டேஷன் உள்ளே வந்தேன், இன்னிக்கு க்ளினிகல் இங்கப்பா தொந்தரவு பண்ணாதேன்னான். நம்ம தொந்தரவு என்ன, அவன் குரலைக் கேட்போமான்னு ஆசையிலத் தான் ஒரு ஃபோன்.

பையன் இந்த சம்மர்ல paramedic கடைசி பாகம் பண்றான். போன செமஸ்டர் அதற்காக அவங்க அடிக்கடி fire stations க்கும் எமர்ஜென்சி ரூமுக்கும் வேலைக்கு அனுப்ப இப்ப fire certification வாங்க fire courseம் சேர்த்து ஜாயின் பண்ணியதால் இப்ப அடிக்கடி fire stationsலத் தான் வேலை. சின்ன வயசுல எப்பப் பார்த்தாலும் fire trucks வச்சு விளையாடுவான். இப்ப அங்கயே கல்லூரிப் படிப்பும் சேர்த்து.

அமெரிக்காவுல எல்லோர் வீட்டிலும் துப்பாக்கியிருக்கும். துப்பாக்கியில்லாத வீட்டை எண்ணிடலாம். அவன்ட்ட குழந்தையிலிருந்தே சொல்லிச்சொல்லி வளர்ப்பது நம்ம கையில துப்பாக்கியை தூக்கிடக்கூடாதுன்னு அவ்வளவு சொல்லுவேன். வாட்டர் கன்ஸ் வச்சு விளையாடும் போது கூட அவன்ட்ட சொல்லி வளர்த்தது துப்பாக்கி எப்போதும் இன்னொரு உயிரைப் பறிக்கத் தான், நாம செய்யக்கூடாதுடான்னே சொல்லிச் சொல்லியே வந்துருக்கேன்.

பள்ளியில் ஹைஸ்கூல் படிக்கும் போது ஸ்கூல் ஃபுட்பால் விளையாடியதால் அதற்காக அவன் உடம்பைத் தயார் பண்ணி வைத்துள்ளான். ஆஜானுபாகுவாகத்தானிருப்பான், இருக்கானிப்ப. வலிமை அதிகம்.

எப்ப என்னை லிஸ்ட் பண்ணினாலும் போகத்தான் வேண்டித் தான் வரும், போவேம்பாம்பான். எப்ப போனாலும் ஒரு உயிரைப் பாதுகாக்கிற வேலைக்கு மட்டும் போ, மாய்க்கிற வேலைக்குப் போகாதேம்பேன். இப்படியும் உழைக்க முடியும்ன்னு எப்போதும் அவனிடம் சாத்வீகத்தையும் அன்பையும் மட்டுமே சொல்லி சொல்லி வருவேன். ஸ்கூலில் வம்பு பண்ணினா யாரையும் அடிச்சுராதே, உன் வலிமையைக் காட்டினால் போதும் அமைதியாக கடந்து விடலாம்பேன்.

எப்போதும் ரொம்ப அடிக்கடி சொல்வது நம்ம கையில துப்பாக்கியைத் தூக்கிடக் கூடாதுடான்னு. அப்பா தற்காப்புக்கு வேணும்பான்னு அவன் சொன்னாலும் அமைதியாகப் போய்விடுவான்.

இதெல்லாம் சொல்லி சொல்லி நாம் மற்றவர்கள் மேலுள்ள வெறுப்புகளை அவன் மேல் கடத்தாமலிருந்ததாலும், எப்போதும் மற்ற உயிர்களை காப்பது மட்டும் பாருன்னு சொல்லி வளர்த்தது இப்ப பலன் தருது.

நான் துளி கூட எதிர்பார்க்காத வேலைகளை அவனே தேடித் தேடி எடுத்து செய்து வருகிறான். அப்பா, இன்னிக்கு இத்தனை கன் ஷாட் வூண்ட்டோட ஈஆர்க்கு இவ்வளவு பேர்ப்பா, இவர்களைப் காப்பாற்றவே நேரம் அதிகம் செலவாகுது, நீ ஃபோன் வரலைன்னு கூப்பிடாதே, இங்க தான் ஃபயர் ஸ்டேஷன்லையும் ஈஆர்லையும் ஒழுங்காத் தானிருக்கேன் பேசாம இருங்கிறான்.

முன்ன மாதிரியெல்லாம் இல்லாம இப்ப நான் கார் பார்த்து ஓட்ட ஆரம்பிச்சுட்டேன், ஓவர் ஸ்பீடில்லை, அட்டெண்ட் பண்ற கேஸ்களைப் பார்த்ததுல என் கை ஆட்டோமெடிக்கா ஒழுங்கா ஓட்டச் செய்யுதுங்கிறான்.

இந்தியாவில நான் கல்லூரியில படிக்கிற காலத்தில் இலங்கைப் பிரச்சனை. அவ்வளவு அகதிகளைப் பார்த்த நிலமை. வேலை கிடைச்சு அஸ்ஸாம் போனா தீவிரவாதம், அடிக்கடி குண்டு வெடிப்பு பார்த்தது. வேற வேலை தேடி மும்பை இறங்கிய மறு விநாடி பாப்ரி இடிப்பினால் மும்பைக் கலவரங்கள், குண்டு வெடிப்புகள். மயிரிழையில் குண்டு வெடிப்பில் தப்பினேன்.

உலகில் நடக்கும் அடக்குமுறைகளுக்கும் போர்களுக்கும் தீவிரவாதங்களுக்கும் நம்மால் தீர்வுகள் சொல்ல முடியாது. நம்மால் முடிந்தது அதை ஊதி வளர்க்க முடியாமல் எவ்வளவு தூரம் இருக்கிறோமோ அவ்வளவு நல்லது. நட்பையும் சகோதரத்துவத்தையும் சாத்வீகத்தையும் நாம் போதித்தால் தான் நம் குழந்தைகள் அவ்வழியில் செல்வார்கள்.

என் பிரார்த்தனைகளெல்லாம் என் பையன் அவன் தானாக முன் வந்து தானே தேர்ந்தெடுத்துள்ள இந்த சமுதாயப்பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்கிற ஆவல் தான்.

சாத்வீகமாய் இருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Ten paz!

No comments: