Saturday, March 8, 2014

ராசக்காவின் அந்திமம்

ராசக்காவின் அந்திமம்

இன்று தனது நீண்ட வயோதிகத்தின் சுமைகளை அனுபவித்தது போதுமென நிறுத்திக் கொண்டிருச்சு எனது ராசக்கா. இன்னும் சில மணித்துளிகளில் மண்ணில் கரைந்து விடும். இனி என் வாழ்வில் என் ராசக்கவை காண இயலாது. அது என்னிடம் விட்டுவிட்டுச் சென்ற நினைவலைகள் மட்டும் என்றும் இருக்கும்.

ராசக்காவின் மாமன் போய்  15, 20 வருடம் கரைந்து விட்டது. மாமன் இருக்க கொடுத்து விட்டுப் போன அந்த ஒரு வீட்டை மட்டும் கடைசி வரை காப்பாற்றி தன் இருப்பிடமாய் ஆக்கிக் கொண்டாலும், தன் ஆயுளும் இந்த வீட்டிலிருந்தே முடிய வேண்டும் என பிடிவாதமாய் தன முரட்டு குணத்தை விடாமல் காப்பாற்றி வந்தது. கடைசி வரை இந்த வீட்டிலேயே இருந்தாலும் கடைசி ஒரு வாரம் தனது சுய நினைவில் முழுவதும் இல்லாமல், கடைசியில் ஒரு முதியோர் இல்லத்தில் தனது உயிரை விட்டிருக்கு. உயிரற்ற உடலின் கடைசி பயணம் மட்டும் இந்த வீட்டிலிருந்தே புறப்பட மட்டும் ராசக்காவிற்க்கு கிடைத்திருக்கு.

தான் தத்து எடுத்த மகனை கடைசி வரை வைது கொண்டே இருந்துச்சு. அக்காவின் ஏச்சுப் பேச்சைக் கேட்டு அந்த மகன் இனி வரமாட்டர்ன்னு நினைச்சிருந்தேன். ஆனால், கடைசி இரண்டு மூன்று மாதங்கள் அவரே வந்து கவனித்துக் கொண்டிருந்திருக்காரு.

ஒரு காம்பீரத்தோட, தனது  பெண்மையை தடையா  நினைக்காமல் , எப்போதும் ஒரு முரட்டு குணத்தோட  ஒரு பெண் காளையாய்  திரிஞ்சு கிட்டு இருந்துச்சு. அதுவே யாரையும் நெருங்க விடாம செய்திருச்சு. வளர்ப்பு மவனும் விதிவிலக்கல்ல. நெருங்க முடியவில்லை.

உடல்ல வலிமை இருந்த வரை முறுக்கு சுட்டு வித்து கொஞ்சம் காசு சேர்க்க முடியுமான்னு பார்த்தது. முடியவில்லை. மாமன்  சாம்பதிச்ச காசை சரியா சேர்க்காம, வீட்டுல உறவு சனங்களுக்கே  பெரிதும் செலவு பண்ணியது, பிற்க்காலத்தில தனது நீண்ட ஆயுளுக்கு உதவாம போயிருச்சு.

தனது வாழ்வில தனது 75 ஆவது வயது வரை ஒரு நிறைவான ஒரு பெரும் வாழ்வை பெற்றிருந்தாலும், அடுத்த 11 ஆண்டுகள் வறுமையிலும் முதுமையிலும், அதிலும் கொடுமையாக கடைசி ஒரு வருடம் மனம்பிறழ்ந்து எதையும் உணரா வண்ணம் வாழ்ந்து மறைந்திருக்கு என் ராசக்கா.

அது என்னிடம் காட்டிய அன்பும் பரிவும் கடைசி வரை நானும் மறக்காமல் நீண்ட காலம் தொடர்பிலேயே இருந்தேன். இருந்தும் அக்காவின் மறைவு வாழ்வில் ஒரு வடுவை ஏற்படுத்தி தவிர்க்க இயலாமல் போய்விட்டது.

ஒரு தனிப்பட்ட அன்பையும் பரிவையும் என்னிடம் காண்பித்து கடைசியில் தனது அந்திம வாழ்க்கையை எனக்கு ஒரு பாடமாக நடத்திக் காண்பித்து விட்டு இந்த உலகை விட்டு மறைந்து விட்டது.

எனது கண்ணீர் அஞ்சலிகள் ராசக்கா. உன் அந்திமம் எனக்கு ஒரு பாடம். 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ராசக்கா அவர்களுக்கு அஞ்சலிகள்...

”தளிர் சுரேஷ்” said...

ஆழ்ந்த இரங்கல்கள்!