Thursday, June 7, 2012

புழக்கடை



'எலேய்! புழநியில என்னத்தலே துலவுர'ன்னு கேட்கிற சத்தைக் கேட்டு வெடக்குனு திரும்பின என்னப் பார்த்து சிரிச்சுக் கிட்டே நெருங்கிய ராசக்கா, சத்தம் கேட்டு அஞ்சுர மொவனுக்கு புழநியில என்ன சோளின்னுச்சு.

ராசக்கா குரலும் நடைச் சத்தமும் கண் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் தெரிஞ்சுபுடும் எனக்கு. ஆனால் ஒரு நீண்ட லயிப்புல பார்த்து கிட்டுருந்த அந்த பறவையோட செயல் என்ன முடக்கிப் போட்டுருச்சு.

யக்காவ்! சத்தம் போடாம அங்கிட்டுப் பாரு, ஓடிரப் போவுதுன்னு மெதுவா கூவையில, நறுக்குன்னு தலையுல கொட்டிகிட்டே, மரத்தடியில ஒதுங்குரவனை பார்க்கவா புழநியில ஒதுங்கின பொறுக்கிப்பயலே ன்னு வசவு கொடுக்கிற ராசக்காவப் பார்த்து, குட்டு வாங்கின தலையை சொறிஞ்சிக்கிட்டே, மரத்து மேலப் பாருன்னு சொல்றது புரியாம எங்கிட்டோப் பார்த்து பொறணி பேசின, விலசிப் புடுவேன் சாக்கிரதைன்னு கத்துனப் பிறகு தான், அசட்டு சிரிப்பு சிரிச்சுது.

அப்புடி என்னத்தலே அங்கப் பார்த்து கிட்டு இத்தினி நேரமாக் கிடக்கிரன்னு ஒரு கமுட்டுச் சிரிப்போடு கேட்கும் ராசக்காவைப் பார்க்கும் போது அதன் மொவம் மார்ற அழகு பார்த்து ரசிப்போடு, அந்த பட்டுப்போன மரத்தைப் பாருக்கான்னேன்.

அது தலைத் தூக்கிப் பார்க்கையில, அந்த பறவையும் மரத்த ஒரு இடைவிடாம சட சடன்னு கொத்துற சத்தத்தப் பார்த்து, எலேய் மரங் கொத்திப் பறவைலே! என்னமா போடு போடுதுரா ன்னுச்சு.

இப்ப உன் மரமண்டையில சவட்டச் சொல்லட்டுமான்னு நான் சிரிக்கையில, அட வரட்டிப் பயலே, நெனப்பப் பாருன்னுச்சு.

அந்த செத்துப் போன மரத்துல என்னாலே பண்ணுதுன்னு அப்பாவியாக் கேட்கும் ராசக்காவப் பார்த்து, நீ இத்தினி பெருசானாலும் உன்மண்டையில களிமண்ணுன்னு சொல்ல முடியாது. சவட்டி தட்டிரும்.

யக்காவ், அந்த மரம் செத்துப் போச்சு. அதக் கரையான் தான் சாப்பிடுது. மரங்கொத்திப் பறவைக்கு கரையான் பூச்சி துன்னா மாதிரியும் ஆச்சு, அது அரைமணி நேரமா போடற துளையில கூடு கட்டிக்கிட்டா மாதிரியும் ஆயிறும் சொல்ற என்னை ராசக்கா பார்க்கிற பார்வை ஒரு மாதிரி இருந்துச்சு.

ஒன்னும் பேசாம அது நவுரையில, என்னா! ஒன்னும் சொல்லாமப் போறேன்னு கேட்டேன்.

எலேய்! அப்பப்ப ஒரு பெரிய படிப்பு படிச்ச புள்ளையாட்டம் பேசுற நீ! நான் இந்த மாமனோடு புழக்கடையில புழங்க வந்ததிலிருந்து எல்லாம் அத்துப் போச்சுன்னு சொல்லிட்டு போகிற ராசக்காவப் பார்த்து, அது திரும்பிப் போவுற பாதையைத் தான் ஒரு கனத்த மொகத்தொடு பார்க்க முடிஞ்சதே தவிர, அந்த மரங்கொத்தியை திரும்பிப் பார்த்துகிட்டு இருக்க முடியல!

2 comments:

க.பாலாசி said...

வாவ்.. சார் செம ரைட்டிங்.. திடீர்னு காமராஜ் பதிவ படிக்கிறமோன்னு ஒரு எண்ணம் வந்திடுச்சி.. அருமை..

ஓலை said...

மிக்க நன்றி பாலாசி. இமயத்தின் அடியில இருக்கிற கூழாங் கல்லுக்கும் அதன் எபக்ட் இருக்குமில்லையா. நண்பர் காமராஜ் பதிவை எத்தினி தடவை படிச்சிருக்கோம். :-)