Thursday, February 23, 2012

வலையூர் பட்டி

வலையூர் பட்டி

பொதுவா கிராமம்னா ஆத்துக்குப் பக்கத்தில இருக்கணும் இல்ல சாலை வசதியோட கொஞ்சமான தண்ணி அள்ளிகிட்டு வர மாதிரியோ இருக்கணும். இரண்டும் இல்லாம ரோடு வந்து சேரவே இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ஒரு குக்கிராமம் வலையூர் பட்டி.

வலையூர் பட்டியில உனக்கு பொண்ணு எடுக்கப் போறோம்ல என்று குப்பண்ணனோட அப்பத்தா சொல்லிட்டுப் போச்சு. அது சொன்னாலும் சொல்லிச்சு வலையூர் பட்டி எப்பிடி இருக்கும்ன்னு தான் குப்பண்ணனுக்கு நினைப்பே தவிர கட்டப் போறவளப் பத்தி நினைக்கத் தெரியல. அது எப்பிடிஇருந்தா என்ன, அந்த கிராமத்தை பார்த்திடனிம்டின்னு பஸ் ஏறிடிச்சு.

பஸ் நின்ன இடத்துல வழி கேட்கக் கூட சுத்து வட்டம் யாரும் இல்லை. எதோ நடுக்காட்டுல இறக்கி விட்டாப்பல இருக்கேன்னு யோசிக்கும் போது சுளிர்ந்னு முதுகுல ஒரு கல் விழுந்தது. குப்பண்ணன் வலியில ஒரு திட்டு திட்டி சுதாரிக்கும் போது அடுத்து ஒரு செங்கல் வந்து விழுந்தது.

அரண்டு போன குப்பண்ணன் யாருலேன்னு கத்திக்கிட்டே ஒரு ஓட்டம், இருந்த ஒத்தையடிப் பாதையில ஓடிச்சு ஓடிச்சு கண்ணுல ஒரு குடிசை வந்த பிறகு தான் நிப்பாட்டிச்சு. மூச்சிறைப்பு வேகமா நெஞ்சு அடிக்கையில நின்னு தலை தூக்கினா குடிசையிலேர்ந்து செவப்பாட்டி தலையை நீட்ட, குப்பண்ணன் பயந்து போய் ஒ ஊன்னு ஒரு கத்து தன்னையறியாம கத்திருச்சு. செவப்பாட்டி மறுபடியும் யாருன்னு கேட்டப் பொறவு தான் குப்பண்ணனுக்கு உசிரு வந்தது.

ஊரு பாக்க வந்தேன் பாட்டி ன்னு சொல்லி முடிக்கையில செவப்பாட்டி ஒரு கத்து கத்தி ஊரையே கூப்பிட்டிருச்சு. அரண்டு போன குப்பண்ணன் முழிக்கையில ஊர்ப் பஞ்சாயத்து முன்ன நிப்பாட்டிடாங்க. வேறு வழியில்லாம தான் வந்த காரணத்தை சொல்ல வேண்டியாதாப் போச்சு.

பஞ்சாயத்து சனம் அத்தனைக்கும் சிரிப்புத் தாளால. எலேய் நம்ம அல்லியம்மாவ நோட்டம் வுட வந்திருக்காகன்னு ஒரு சிறுக்கிப் பையன் கத்த, குப்பண்ணன் அங்கிட்டுர்ந்து மறுபடியும் ஓடிரலாமான்னு யோசிச்சிட்டிருக்கையில, தோள் மேல ஒரு கனமான கை விழுந்து, நம்ம மாப்பிள்ளை அப்பத்தாவோடையே வந்திருக்கலாமேன்னு சொல்லி இழுக்கையில, மாட்டிநோமடா சாமின்னு தலையத் தூக்கினா பக்கத்தில செல்வம் மாமன் நிக்கறாரு.

மாமா! நீங்க எப்பிடி இங்கன்னு இழுக்கையில, மாப்பிள்ளை வருதுன்னு சொல்லிருந்தா வண்டி கட்டி வந்திருப்போம்ல என்று சொல்ல, தனக்கு வந்த அழுகாச்சிக்கிடையில சிரிப்பு தான் வந்துது. இந்த ஒத்தையடிப் பாதையில என்ன வண்டி கட்டப் போற மாமான்னு திருப்பி கேட்கவும், பாரு மாப்பிள்ளை இந்த தடத்தில நீயே ரோடுபோடறயா இல்லையான்னு செல்வம் மாமன் சொல்லிகிட்டே நடந்தது.

இப்பிடி ஒரு சந்திப்பு வலையூர் பட்டியோட நடக்கும்ன்னு குப்பண்ணன் நினைச்சிப் பார்க்கலை!

4 comments:

எல் கே said...

athu sari yaru kallai veesithiyathu

ஓலை said...

சொல்றேன் கார்த்திக்.

Anonymous said...

headings are gud..

ஓலை said...

Nanringa.