Monday, January 16, 2012

பாவனைகள்

போன பதிவில் குறிப்பிட்ட படி முதல் நாள் மாலை நேரமாகி விட்டதால் புலிகள் சரணாலயமும் பாணதீர்த்தமும் பார்க்கமுடியாமல் பாபனாசத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். நண்பர் வழியில் தான் பத்தமடை என்றார். எழுத்தாளர் தமிழ்செல்வன் அவர்களைப் பார்க்கமுடியுமா என்றேன். நண்பர் உடன் தொடர்பு கொண்டதில் அதிர்ஷ்டவசமாக அன்று வீட்டில் இருந்தார். எங்களை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். வீட்டில் அருமையான டீ உபசரிப்புடன் ஒரு அருமையான கதைப் புத்தகத்தை பரிசாக அளித்தார்.

இன்று கையில் எடுத்து முதல் கதையைப் படித்தவுடன் உங்களிடம் பகிரத் தோன்றியது. அது அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பின் முதல் கதை 'பாவனைகள்'. புத்தகம் 'மிதமான காற்றும் இசைவான கடலலையும்' - தமிழினி பதிப்பகம்.

புத்தகத்தின் அட்டையைப் பார்த்த வுடனேயே ' இது உன் நண்பர் உனக்குப் பரிசளித்ததல்லவா' என்று எனது மகன் நினைவு கூறும் அளவிற்கு அதன் அட்டைப் படம் அந்த சிறுவனின் மனதில் கவரக் கூடிய அளவில் வெளிவந்துள்ளது.

எங்கள் சிறு வயதில் தொழிலாளர் குடியிருப்பில் வரும் கைவண்டி பண்டகங்களை சுற்றி நாங்கள் வலம் வந்து செய்த செயல்களைப் ஒரு படைப்பாக இக்கதையில் பார்க்க முடிகிறது. கைவண்டியை தெரு முழுக்க முன்னரும் பின்னரும் சுற்றி, சில நாள் பொருட்களை வாங்கியும், வாங்காத நாட்களில் ஒரு ஏக்கத்துடன் ஒரு பாவனையோடு வெளிப்படுத்தும் சின்ன சிறார்களின் வெளிப்பாடுகள் அழகோவியமாக இந்தக் கதையில் வந்துள்ளது.

புத்தகத்தின் முன்னுரையில் சொல்லும் வாதம், 'வறுமை இல்லை தான் என்றாலும் வாழ்வு பற்றிய அச்சமே வாழ்வை பிழைப்பாக்கி ...', மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

முதல் கதையைப் படிக்கும் வரை இதை பதிவில் உங்கள் முன் கொண்டு வருவேன் என்று நினைக்கக் கூட இல்லை. எனக்குப் பழக்கமில்லாத ஒன்று.
நீங்களும் படித்துப் பாருங்கள்.

2 comments:

vasu balaji said...

good one:)

ஓலை said...

நன்றி பாலா சார். முன்பே புக் படிச்சாச்சா?