Sunday, January 15, 2012

பாணதீர்த்தம் அருவி

தென் தமிழ்நாட்டின் எழில் மிகு பகுதிகளில் மிகவும் பிரமிக்க வைக்கும் ஒரு அருவி பாணதீர்த்தம். தாமிரபரணி ஆற்றின் பிரவாகமாய் காரையார் அணையை ஒட்டி ஒரு ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ள ஒரு அற்புத எழிலோவியம். அருவியை அடைய தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணையின் மீதான ஒரு விசைப் படகு சவாரி, கூடவே நம்மை சுற்றியுள்ள இயற்கையின் அழகைப்பார்த்து பிரமிக்க வைக்கிறது.

குற்றாலம் பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவலை நண்பரிடம் சொன்ன போது, 'அதுக்கென்ன! இரண்டு நாள் சேர்ந்தார்ப் போலிருந்தால் எல்லாம் பார்த்துவிடலாம்' என்றார். சேலத்திலிருந்து குற்றலாம் நோக்கிய எங்கள் பயணம், திடீர் திருப்பமாய் முண்டந்துறை புலிகள் சரணலாயம் மற்றும் பாணதீர்த்தம் அருவி நோக்கி நகரும் பயணமாக மாறிவிட்டது.

பாபநாசம் நெருங்கும் போது மாலை 5 மணிக்கு மேலாகிவிட்டதால், வனக்காவலர்கள் அனுமதிக்காததினால் வருத்தத்துடன் திருநெல்வேலி திரும்ப வேண்டியதாகி விட்டாலும், வழி நெடுக இருந்த வயல்களில் இயல்பாய்த் திரியும் ஆண் பெண் மயில்களின் அலங்கார நடையும், பல்வேறு விதமான பறவைகளின் வாசம் கணக்கிலடங்கா எண்ணிக்கையில் புழங்கும் அச்சூழல் அத்தனையும் மறக்கச் செய்தது. பாபநாசம் சிவன் கோவில் வாசலில் பிரவாகமாய் விரிந்தாடும் தாமிரபரணியின் ஆற்றுக் கரையில் காலை வைத்து அந்த குளிர்ந்த நீரில் மிதக்கும் துள்ளி விளையாடும் மீன்களைப் பார்க்கும் மாலைப் பொழுது, நமது சின்ன சின்ன ஆசைகளை அசை போட வைக்கிறது.

இங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் கட்டப்பட்டுள்ள புழக்கமில்லாத புது அரசினர் விடுதிக்கு முன் உள்ள மரத்தில் கொஞ்சும் கிளிகளின் ஆரவாரம் சூழ்நிலையை மெருகூட்டுகிறது. இயற்கை மட்டுமா! அதன் எதிரில் உள்ள டீ கடையில் கண்முன் செய்து கொடுக்கப்படும் சூடான இட்லி, வடை, பூரி எல்லாம் சுவை மட்டுமல்ல, அதன் விலையும் எளிதான மக்களின் சுயநலமற்ற வாழ்வு கைகூப்ப வைக்கிறது. இட்லி 2 ரூபாய் மட்டுமே.

மறுநாள் காலையே முண்டந்துறை சரணாலயத்தில் மதிய உணவுக்குப் பணம் கட்டி விட்டு, பாணதீர்த்தம் நோக்கிப் பயணமானோம். வனம் முழுக்கப் பார்த்து பரவசமடைய வைக்கிறது. கீரி தனது இரையான பாம்பை இழுத்து செல்வதும், கொம்பேறி மூக்கன் பாம்பு என்று அழைக்கப் பட்ட அந்த நீளமான ஊர்வனம் சிறு துளி நிமடங்களில் தரையிலிருந்து மரம் ஏறி எங்களை நோக்கியதும், வழி நெடுக மயில் மற்றும் காடைகளின் தரிசனங்களோடு செல்லக்கூடிய பயணம் அது.

முழுதும் நிரம்பி வழிகின்ற அணையை சீக்கிரமே அடைந்து ஒரு தனி விசைப் படகில் பாணதீர்த்தம் நோக்கிப் பயணமானோம். சுற்றிலும் மலைப் பிரதேசம், நடுவில் மிகப் பெரிய நீர்த் தேக்கம், அதன் நடுவில் செல்லும் எங்கள் விசைப் படகின் அசைவு, ஒரு தாலாட்டு பாடி அழைத்துச் செல்வதாகவே உணர்ந்தேன். அருவியின் தரிசனம் படகிலிருந்து கிடைக்கும் போது ஏற்பட்ட உணர்வு மலைப்பாக இருந்தது. அருவியில் குளிக்கும் போது தலையில் விழும் சட சடவென்ற சத்தம் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அருவியி தூய நீரை யாரும் சோப்பு போட்டு மாசு படுத்தாமல் இருந்தது மிகவும் வரவேற்கத் தக்கது. தண்ணீரின் சுத்தம் நேரடியாக அருந்தும் போது மட்டுமல்ல, நமது தலை முடி அந்த நீர் பட்டு மிகவும் soft ஆக மாறியதை நன்கு உணர முடிந்தது.

பாணதீர்த்தம் அருவி நோக்கிய எங்கள் பயணம் மிக சிறந்ததாக இருந்தது.

குற்றாலத்தில் எல்லோரும் தேவைக்கு அதிகமாக சோப்பு உபயோகிப்பது மட்டுமில்லாமல், அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் மீதியை வீசாமல், அந்த நீரிலேயே வீசுவது நீரின் நிறம் சுவை, நீரினத்தின் வாழ்வு அனைத்தையும் வீழ்த்துவது  உணராமல் செய்யும் செயல் எதுவும் பாண தீர்த்தத்தில் இல்லாதிருப்பது மேலும் மனதிற்கு நிறைவாக இருந்தது.

நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள்.

2 comments:

vasu balaji said...

பாண தீர்த்தம் போகும் பாதை சரி செய்தார்களா தெரியவில்லை. குண்டும் குழியுமாக இருந்தது:(

ஓலை said...

ஓரளவுக்குப் பரவாயில்லை சார். ரொம்ப மோசமில்லை.